மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆக்ராவிற்கு தெற்கே அமைந்துள்ள மாவட்டம் குவாலியர். இங்கு கரோனாவைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கையில் புதுமையானது, தன்னார்வலர்களாகப் பணியமர்த்தப்படும் நடவடிக்கை.
கரோனா முன்னெச்சரிக்கை நெறிமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, மருத்துவமனை, சோதனைச் சாவடிகளில் மூன்று நாள்களுக்குத் தன்னார்வலர்களாகப் பணியாற்ற வைக்கப்படுவார்கள் என்று அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்மாவட்ட ஆட்சியர் கௌஷலேந்திர விக்ரம் சிங் தலைமையில் நடந்த ‘கில் கரோனா’ என்ற விழிப்புணர்வு கூட்டத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கரோனா விதிகளைப் பின்பற்றாமல் சாலைகளில் செல்வோருக்கு அபராதம் மட்டும் அல்லாமல், கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைகளில் மூன்று நாள்களுக்குத் தன்னார்வலர்களாகப் பணியாற்ற வைக்கப்படுவார்கள். இந்தக் கூட்டத்தில் பேசிய, ஆட்சியர் விக்ரம் சிங், பிற மாநிலங்களிலிருந்து வருபவர்களை மாவட்ட எல்லைகளில் கட்டாயம் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
குவாலியரில் நேற்று (ஜூலை 5) ஒரே நாளில் 51 பேருக்குக் கரோனா பாதிப்பு உறுதியானது. இதன்மூலம் அந்த மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 528ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: வெட்டிவேரில் முகக்கவசம் தயாரித்து அசத்தும் பிசியோதெரபிஸ்ட்!