மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் அமெரிக்க, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதி வழங்கக் கோரி ஃபைசர், சீரம் ஆகிய நிறுவனங்கள் மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகத்திடம் விண்ணப்பித்துள்ளது. இந்நிலையில், தடுப்பூசி விநியோகத்திற்கான வழிகாட்டுதலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ஒரு அமர்வில் 100 முதல் 200 பேர் வரை கரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தடுப்பூசி செலுத்தப்பட்ட நபரை 30 நிமிடங்கள் வரை கண்காணிக்க Co-WIN என்ற டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "நிபுணர் குழு பரிந்துரையின் படி ஒரு கோடி சுகாதார பணியாளர்கள், இரண்டு கோடி முன்கள பணியாளர்கள் உள்பட முதல் கட்டமாக 30 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.
சமீபத்தில் நடைபெற்ற மக்களவை, சட்டப்பேரவை தேர்தலின் போது வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலை பயன்படுத்தி 50 வயதுக்கு மேலானவர்கள் அடையாளம் காணப்படுவார்கள். ஐந்து பேர் கொண்ட குழு, மக்களுக்கு தடுப்பூசியை செலுத்தவுள்ளது. மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் இடத்தில் காத்திருப்பு அறை, கண்காணிப்பு அறை, கூட்டத்தை சமாளிக்கும் அளவு ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருக்கும் பட்சத்தில் தடுப்பூசி செலுத்துவதற்கு மேலும் ஒரு அலுவலர் ஒதுக்கப்படுவார்.
12 புகைப்பட ஆதாரங்கள், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், ஓய்வூதிய அட்டை உள்ளிட்டவை கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட முன்னுரிமை பட்டியலின் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படும். முன்பதிவு செய்யாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படாது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.