புதுச்சேரி மேட்டுப்பாளையம் அருகே உள்ள கனரக வாகன நிறுத்தத்தில் சிலா் கஞ்சா விற்பனை செய்வதாகத் தன்வந்திரி நகர் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில், தன்வந்திரி நகர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணராஜ் தலைமையிலான காவல் துறையினர், அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனங்களில் நின்றிருந்த நான்கு பேரை பிடித்து சோதனையிட்டனர்.
அவா்கள் அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த 4 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவா்கள் கடலூா் மாவட்டம், சேத்தியாதோப்பு பகுதியைச் சோ்ந்த பி. கனகராஜ் (22), புதுச்சேரி மூலக்குளம் பகுதியைச் சோ்ந்த ஜெ. ஷியாம் வேல்ஸ் (19), ஐயங்குட்டிப்பாளையத்தைச் சோ்ந்த காக்கா (எ) எம். சீனு (20), எம். ரித்விக்குமாா் (19) என்பதும் அவா்கள் அந்தப் பகுதியில் சிறு, சிறு பொட்டலங்களாகக் கஞ்சா விற்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவா்களைக் கைது செய்ததுடன் விற்பனைக்காக வைத்திருந்த 4.5 கிலோ கஞ்சா, இரண்டு இருசக்கர வாகனங்கள், செல்போன்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்பு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கஞ்சா பதுக்கி வைத்த வட மாநில கும்பல் சென்னையில் கைது!