உலகை உலுக்கி வரும் கரோனாவை உலுக்க இதுவரை ஒரு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆயினும், மலேரியாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை கரோனாவுக்கும் பயன்படுத்தலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அறிவித்தது.
இந்தியா ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை 70 விழுக்காடு அளவிற்கு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. உலக நாடுகளில் அதிகளவில் ஹைட்ராக்சிகுளோரோகுயினை உற்பத்தி செய்வதும் இந்தியாவே. இந்நிலையில், நாட்டில் தற்போது கரோனா தீவிரமடைந்ததால், இம்மருந்து ஏற்றுமதிக்கு தடை விதித்தது.
இதையடுத்து அமெரிக்க உள்பட பல்வேறு நாடுகளும் இந்தத் தடையைத் தளர்த்துமாறு இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்தன. ஆனால் இந்தியாவோ எதற்கும் செவிசாய்க்காமல் இருந்ததையடுத்து, தடையை நீக்காவிட்டால் இந்தியா கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்தார்.
பின்னர் இந்தியா தடையை நீக்கிக்கொள்வதாகக் கூறிய பிறகு ட்ரம்ப்பும் பிரேசில் அதிபர் பொல்சானாரோவும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர். ஆனால் மறுபுறம் எதிர்க்கட்சியினர் தடையை நீக்கியதற்காக கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்ததையடுத்து மத்திய அரசு தற்போது பதிலளித்துள்ளது.
தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் தலைவர் சுப்ரா சிங், “நமது நாட்டிற்குத் தேவையான ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து கையிருப்பில் உள்ளது. அதன் தேவை, உற்பத்தி செய்யும் அளவு ஆகியவை குறித்து தினமும் கண்காணித்து வருகிறோம். முதலில் நமது நாட்டிற்கே முன்னுரிமை அளிக்கப்படும். அதன் பின்பே மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து ஆலோசிக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: கரோனாவுக்கு ஆயுர்வேதத்தில் மருந்து இல்லை: கோவா முதலமைச்சர் பேச்சு