இந்தியாவில் அதிகரித்துவரும் கரோனா வைரஸ் தொடர்பாக, பிரதமர் மோடி மாநில முதலமைச்சர்களுடன் காணொலி அழைப்பின் மூலம் கலந்துரையாடினார். இதில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டார்.
இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நாராயணசாமி, 'நேற்று (ஜூன் 16) பிரதமருடன் பேச வாய்ப்பு கொடுக்கவில்லை. ஆனால், ஏற்கெனவே புதுச்சேரி மாநிலத்திற்குத் தேவையான நிதியை வழங்க பிரதமருக்குக் கடிதம் எழுதி இருந்தேன்.
மாநில அரசு வைத்த கோரிக்கையை, மத்திய அரசு நிறைவேற்றவில்லை. புதுச்சேரி மாநில அரசுக்கு பிரதமர் உதவி செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு வருபவர்களால் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
மாநிலத்திலும் கடைகள் இரவு 8 மணி வரை திறந்து இருப்பதால், அதிகப்படியான மக்கள் நடமாட்டம் உள்ளது. வெளியில் இருந்து வருபவர்களால் தான் அதிகப்படியான கரோனா தொற்று ஏற்படுகிறது. தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை என்றால், அதிகப்படியான அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், முகக்கவசம் அணியாமல் வந்தால் இரட்டிப்பு அபராதம் விதிக்கப்படும். மேலும் மாநில அரசின் அனுமதி இல்லாமல் சென்னையிலிருந்து வருபவர், யாராக இருந்தாலும் எல்லையில் தடுத்து நிறுத்தப்படுவார்கள்.
அதேபோல் விழுப்புரம், கடலூரைச் சேர்ந்தவர்கள் மருத்துவம் பார்ப்பதைத் தவிர்த்து வந்தால் ஜூன் 17 (இன்று) முதல் எல்லைகளில் தடுத்து நிறுத்தப்படுவார்கள். ஜூன்17 (இன்று) முதல் புதுச்சேரியின் எல்லைகள் முழுமையாகச் சீல் வைக்கப்படும்’ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : முகக் கவசம் அணியாமல் வெளியே வந்தால் அபராதம் - சுகாதாரத்துறை எச்சரிக்கை