கரோனா வைரஸ் தாக்கம் காரணமாகப் பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதையடுத்து, வங்கிக் கடன்களுக்கான மாதத் தவணையை மூன்று மாதங்களுக்குப் பிறகு செலுத்த, ரிசர்வ் வங்கி அனுமதியளித்தது. பின்னர், தவணை செலுத்துவதற்கான கால அவகாசம் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இந்த உத்தரவால் மாதந்தோறும் செலுத்தப்படும் தவணைத் தொகை அதிகரிப்பதாக, சிலர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மேலும், கரோனா காலத்தில் வசூலிக்கப்பட்ட வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். நீதிபதிகள் அசோக் பூஷண், சுபாஷ் ரெட்டி, எம். ஆர். ஷா ஆகியோர் கொண்ட அமர்வு, இந்த வழக்கை விசாரித்துவந்தது.
இந்நிலையில், இன்றைய விசாரணையில் வட்டிக்கு வட்டியை தள்ளபடி செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதனை தள்ளுபடி செய்வதற்கு நவம்பர் 15ஆம் தேதி வரை காலஅவகாசம் கேட்டு மத்திய அரசு கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், "வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்வதற்கு கேட்கப்படும் கால அவகாசத்தால் பொது மக்கள் பாதிப்புக்குள்ளாவார்கள். 2 கோடி வரை கடன் வாங்கியவர்கள் மீது எங்களுக்கு அக்கறை உள்ளது. கடன் தள்ளுபடியை அமல்படுத்துவதற்கு ஏன் இவ்வளவு கால அவகாசம் தேவை? " என்றனர்.
அரசின் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர், "இரண்டு கோடி வரை கடன் வாங்கியவர்களின் வட்டியை தள்ளுபடி செய்வதன் மூலம் பெரும் சுமையை மத்திய அரசு ஏற்கிறது. ஆனால், எவ்வளவு என குறிப்பிட விரும்பவில்லை" என வாதாடினார்.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், "மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நாங்கள் உத்தரவை பிறப்பிக்கவில்லை. மக்களின் இன்னலை கருத்தில் கொள்ள வேண்டும். குறைந்த அளவிலான மக்கள் இதனால் பலன் பெறவுள்ளனர். எனவே, இது வரவேற்கதக்க ஒன்று" என்றார்கள்.
இதையும் படிங்க: மும்பை மெகா மின்வெட்டு சதிவேலையா? சந்தேகம் கிளப்பும் அமைச்சர்!