லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் திங்கள்கிழமை இரவு படைகளைத் திரும்பப்பெறும் நடவடிக்கையின்போது இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் உள்பட 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். சீனா தரப்பிலும் சுமார் 40 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், இரு நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்துள்ளது. பதற்றத்தைத் தணிக்கும் வகையில் இரு நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர்களும் தொலைபேசியில் உரையாடினர். இந்நிலையில், இந்தியாவின் இறையாண்மையை சீனா மதிக்க வேண்டும் என நாடு கடந்த திபெத் அதிபர் லோப்சங் சங்காய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஈடிவி பாரத்திற்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், "இரு நாடுகளுக்கிடையேயான பிரச்னையில் உலக நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். இந்தியாவின் இறையாண்மையை சீனா மதிக்க வேண்டும். இமாலய எல்லைப் பகுதியில் அமைதி நிலவிட திபெத் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்குத் தரப்படும் நிதியுதவியை உயர்த்திய பஞ்சாப் அரசு!