டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக பெற்ற படுதோல்வியைத் தொடர்ந்து, பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, அக்கட்சியின் பொதுச் செயலாளர்களை வரவழைத்து, டெல்லியின் தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிக்கவுள்ளார். இன்று மாலை ஐந்து மணியளவில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கலந்துகொள்ள உள்ளார்.
டெல்லி தேர்தலுக்காக பாஜக சார்பில் 21 நாட்கள் சூறாவளிப் பரப்புரை மேற்கெள்ளப்பட்டது. இந்த தேர்தல் பரப்புரையில், மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பங்குபெற்றனர். பிரதமர் மோடி கூட சில தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் பங்கேற்றார். ஷாகீன் பாக் போராட்டம், சட்டப்பிரிவு 370 நீக்கம், குடியுரிமை திருத்தச் சட்டம், ராமர் கோயில் விவகாரம் போன்றவை இந்தப் பரப்புரையில் முதன்மையாக்கப்பட்டன.
இருந்தபோதிலும், பாஜக எதிர்பார்த்த வெற்றியைப் பெறமுடியவில்லை. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகிய பின்பு பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, மக்களின் இந்த முடிவை ஏற்றுக்கொள்வதாகவும்; டெல்லி சட்டப் பேரவையில் பாஜக எதிர்க்கட்சியாக இருந்து ஆக்கப்பூர்வமான சில வேலைகளை முன்னெடுக்கும் எனவும் தெரிவித்தார்.
பாஜகவின் முக்கியத் தலைவர்கள் ஷாகீன் பாக் போராட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேசி வாக்குகளை அள்ளிவிடலாம் என எதிர்பார்த்தனர். ஆனால், பாஜகவுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. இன்று மாலை நடைபெறவுள்ள ஆலோசனைக்கூட்டத்தில், தோல்விக்கான காரணங்கள் குறித்தும்; அடுத்தகட்ட வேலைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: முன்பைவிட அதிக தொகுதிகளில் வெற்றி - ஷாம் ஜாஜு