மக்களவைத்தேர்தலை யொட்டி வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு விளம்பரங்களை அனைத்து கட்சிகளும் செய்து வருகின்றன. இந்த நிலையில், 'அப் ஹோகா நியாய்' (Ab hoga nyay) என்ற தனது தேர்தல் முழக்கத்தை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. நீதி இப்போது வந்துவிட்டது என பொருள்படும் இந்த முழக்கத்தை முன்வைத்து அக்கட்சி தேர்தல் பரப்புரை மேற்கொள்ளும். காங்கிரஸின் பிரதான தேர்தல் வாக்குறுதியான வறுமை கோட்டிற்கு கீழுள்ள ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் 'நியாய்' திட்டத்தை முன்னிலைப்படுத்தி அக்கட்சியின் தேர்தல் முழக்கம் அமைந்துள்ளது.
'நியாய்' திட்டத்தை மட்டும் முன்னிலைப்படுத்தவில்லை, விவசாயிகளுக்கு நீதி, இளைஞர்களுக்கு நீதி, தொழில் முனைவோருக்கு நீதி ஆகிய அம்சங்களுடன் தேர்தல் முழுக்கம் அமைந்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த சர்மா தெரிவித்துள்ளார். 'நியாய்' என்ற சொல்லுக்கு நீதி என்பது பொருள்.
மேலும், அனைவரையும் உள்ளடக்கியது காங்கிரஸ் கட்சி என்று கூறும் வகையில் தேர்தல் பாடல் ஒன்றையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது.
அதேபோல் பாஜவும் தனது தேர்தல் முழக்கத்தை வெளியிட்டுள்ளது. 'பிர் ஏக் பார் மோடி சர்கார்' (Phir Ek Baar, Modi Sarkar) என்ற வாசகம் மீண்டும் மோடி என்ற பொருளைத்தரும். இதனை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, தனித்து முடிவெடுக்கும் பலம் கொண்ட அரசு அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தி தங்கள் கட்சியின் தேர்தல் பரப்புரை அமையும் என்று குறிப்பிட்டார். நம் நாட்டிற்கு ஒரு கேப்டன்தான் தேவை என்றும், 11 உறுப்பினர்களை கொண்ட 40 கேப்டன்கள் தேவையில்லை என்றும் ஜேட்லி கூறினார்.
இதனிடையே தாமரை மலரும் (Phir se Kamal Khilate Hai) என்ற தேர்தல் தீம் சாங் ஒன்றையும் பாஜக வெளியிட்டுள்ளது.