கடந்த இரண்டு வாரங்களில், தெற்கு காஷ்மீரின் ஷோபியன், புல்வாமா மற்றும் குல்காம் மாவட்டங்களில் ஏற்பட்ட மோதலில், 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இதில், ஹிஸ்புல் முஜாஹிதீன், ரியாஸ் நாய்கூ மற்றும் ஜுனைத் செஹ்ராய் உள்ளிட்ட பயங்கரவாத குழுவின் உயர் தளபதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு நீக்கிய ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குப் பின்னர், காஷ்மீரில் "அமைதியான சூழ்நிலையை" சீர்குலைக்க பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சித்துவருவதாக பாதுகாப்புப் படையினர் தெரிவிக்கின்றனர்.
காஷ்மீரில் மக்களின் வாழ்வதாரத்தை சீர்குலைக்க பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து தங்களுக்குத் தெரிந்திருப்பதாகவும், எந்தவிதமான இடையூறும் ஏற்படுத்தவிடாமல் பாதுகாத்து வருவதாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆகஸ்ட் ஐந்தாம் தேதிக்குப் பின்னர் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறைக்கப்பட்டதால், இளைஞர்கள் அதிகளவில் பயங்கரவாதிகளுடன் சேர்வது அதிகரித்துள்ளதாவும், இது பள்ளத்தாக்கு பகுதிகளில் பதற்றமான சூழ்நிலையைப் ஏற்படுத்தியுள்ளதாகவும் காவல் துறையினர் கவலைத் தெரிவித்துள்ளனர்.
தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையின் காரணமாக, எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லையில் பயங்கரவாதிகள் ஆயுத பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர் என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
வீடுகள் அதிகளவில் சேதம் அடைகின்றன
பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகளின் இருப்பிடம் பற்றிய தகவல்களைப் பெற்ற பின், பெரும்பாலான என்கவுன்ட்டர்கள் குடியிருப்பு பகுதிகளில் நடைபெறுகின்றன.
பாதுகாப்புப் படையினர் உயிரிழப்புகளை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, பயங்கரவாதிகளின் இருப்பிடங்கள் சுற்றி வளைக்கப்பட்டு, வெடி பொருள்கள் கொண்டு அந்த இடம் தாக்கப்படுகிறது. இதன் காரணமாக சுற்றுவட்டாரத்தில் அமைத்துள்ள வீடுகள் கடுமையான சேதத்திற்கு ஆளாகின்றன.
காஷ்மீரில், உள்ளூர்வாசிகள் தங்கள் வீடுகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக கூட்டு நிதியளிப்பதன் மூலம் இந்த மக்களை மீட்க வருகிறார்கள்.