மகாராஷ்டிர மாநிலம் மும்பை மாநகரிலுள்ள முலுண்டில், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் தடுப்பு மருந்து ஊசியினை சிலர் சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக உணவு மற்றும் மருந்து நிர்வாக அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தடுப்பு மருந்தினை வாங்கும் வாடிக்கையாளர்கள்போல் வேடமிட்டு சென்ற அலுவலர்கள், மருந்து விற்பனை செய்துவந்த ஏழு பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து மருந்துகளும், ஊசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஐந்தாயிரத்து 400 ரூபாய் மதிப்புள்ள தடுப்பூசி 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய்வரை விற்பனை செய்யப்பட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து, உணவு மற்றும் மருந்து நிர்வாக அலுவலர் அருண் உன்ஹேல் கூறுகையில், இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முன்னதாக, மீரா சாலையில் ரெம்டெசிவிர் தடுப்பு மருந்துகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து நான்கு தடுப்பு மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், பாந்த்ராவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் மருந்தாளர் இந்த மருந்தை அவர்களுக்கு வழங்கியதாக விசாரணையில் தெரியவந்ததாக கூறினார்.