கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 25ஆம் தேதி தொடங்கி அமலில் உள்ள ஊரடங்கு, வருகிற ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக குடிபெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் சிறு, குறு தொழிலாளர்கள், தினசரி கூலித் தொழிலாளர்கள் ஆகியோரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
இதில், ஊரடங்கின்போது பொது மக்கள், சிறு, குறு தொழிலாளர்கள், குடிபெயர் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு ஏற்பட்ட சிரமங்கள் குறித்து செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர்கள் மீது, மத்திய, மாநில அரசுகள் வழக்குப் பதிவு, கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்நிலையில் இது தொடர்பாக உரிமை மற்றும் இடர் பகுப்பாய்வு அமைப்பின் இயக்குநர் சுஹாஸ் சக்மா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் “கரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின்போது சுமார் 55 ஊடகவியலாளர்கள் மீது வழக்குப் பதிவு, கைது, வன்முறை தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
இதில் 22 ஊடகவியலாளர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழும், தொழில்நுட்பப் பிரிவின் கீழும், பட்டியலின வன்கொடுமை சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம் ஆகியவற்றின் கீழும் மத்திய அரசையும் அரசியல் கட்சித் தலைவர்களையும் விமர்சித்ததற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.