கேரளா: இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும், மாப்பிள இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த நிலக்கிழார்களுக்கு எதிராகவும் மலபார் புரட்சியாளர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
மகாத்மா காந்தி, பல தேசிய தலைவர்களின் ஆதரவைப் பெற்ற இந்தப் போராட்டம்தான் ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்துக்கு வித்திட்டது. பெரும் கலகத்தை ஏற்படுத்திய மலபார் புரட்சியாளர்களை ஆங்கிலேயர்களால் சமாளிக்க முடியவில்லை. பின்னர் 1921ஆம் ஆண்டு அவர்களை ஆங்கிலேயே அரசு தன் கொடுங்கோலால் அடக்கியது.
மலபார் புரட்சியாளர்களைக் கைதுசெய்த ஆங்கிலேயே அரசு, அவர்களைச் சிறைக்கு அனுப்பும்போது நிகழ்ந்த சம்பவம் ஒன்று இன்றும் ஆறாத வடுவாக இருக்கிறது. பாரவண்டி படுகொலை என அழைக்கப்படும் இதன் நூற்றாண்டு நினைவு நாள் இந்த ஆண்டு வருவதையொட்டி, இந்தத் தொகுப்பில் அது குறித்து காணலாம்.
100 மலபார் புரட்சியாளர்களைக் கைதுசெய்த ஆங்கிலேயர்கள், அவர்களை கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள மத்திய சிறைக்கு அனுப்ப முடிவுசெய்தனர். 1921 நவம்பர் 20ஆம் தேதி மலப்புரம் மாவட்டம் திரூர் ரயில் நிலையத்திலிருந்து ஒரு மூடப்பட்ட பாரவண்டி (wagon) மூலம் புரட்சியாளர்களை பெல்லாரிக்கு அனுப்பினர். மூடப்பட்ட சிறிய பாரவண்டியில் அனைவரையும் நெருக்கி அனுப்பிவைத்ததால், பலரும் உயிரிழந்தனர்.
இது குறித்து இந்தக் கோர சம்பவத்தில் தப்பிப் பிழைத்த கன்னோலி அகமது ஹாஜி தனது சுயசரிதையில், தலையணைக்குள் பஞ்சை வைத்து திணிப்பதுபோல் எங்களைப் பாரவண்டிக்குள் அடைத்தனர். கைதுசெய்யப்பட்டவர்களில் பலர், ஒருவர் கால் மீது ஒருவர் நிற்கும் சூழல் ஏற்பட்டது. ராணுவ அலுவலர்கள் எங்களை உள்ளே வைத்து அடைத்து கதவுகளைத் தாழிட்டனர். பயணம் தொடங்கிய சில மணி நேரத்தில் பாரவண்டி ஒரு வாயு அறையாக மாறியது.
பாரவண்டிக்குள் ஒளியும் வராது, காற்றும் புகாது கைதிகள் கதறத் தொடங்கினர். கடுமையான தாகத்தால் நிலைகுலைந்தனர். தாகம் தாங்க முடியாமல் தங்கள் வியர்வையை தாங்களே குடித்தனர், உச்சகட்டமாக சிறுநீரையும் குடிக்க முயற்சித்தனர்.
சுவாசிக்க முடியாததால் கைதிகள் ஒருவரை ஒருவர் தாக்கத் தொடங்கினர். எனக்கும் சிறிது நேரத்தில் மயக்கம் வந்துவிட்டது, கண்விழித்துப் பார்த்தபோது சுற்றிலும் பிணங்கள், சிறுநீர், ரத்தம், வாந்தி, கழிவுகள் கிடந்தன.
திரூர் ரயில் நிலையத்தில் பயணத்தை தொடங்கிய ரயில், பாலக்காடு மாவட்டம் ஷோரனூர், ஒலவக்கோடு ஆகிய இடங்களில் மட்டுமே நின்றது. மற்ற ரயில் நிலையங்களை கடந்து செல்லும்போது கைதிகள் சத்தம் அதிகமானதைத் தொடர்ந்து, தமிழ்நாடு போத்தனூர் ரயில் நிலையத்தில் வண்டி நிறுத்தப்பட்டது.
பாரவண்டியின் கதவுகள் திறக்கப்பட்டபோது மூச்சுத்திணறலால் 64 பேர் உயிரிழந்திருந்தனர்; பலரும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அதில் நானும் ஒருவன்; யாரோ குளிர்ந்த நீரை பாரவண்டிக்குள் ஊற்றினர்; அதில் என் உடல் சிலிர்த்து நடுங்கியது. அதன்பிறகே நான் உயிரோடிருப்பதைக் கண்டு, கோவை மருத்துவமனையில் அனுமதித்தனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்று ஆசிரியர்கள் இந்தப் படுகொலையை ஜாலியன் வாலாபாக் படுகொலையோடு ஒப்பிடுகின்றனர். இதில் தப்பிப் பிழைத்தவர்கள் சிகிச்சைக்குப் பின் கர்நாடக சிறைக்கு அனுப்பப்பட்டனர். பிணங்கள் நிறைந்த அந்தப் பாரவண்டியை ரயில்வே அலுவலர்கள் மீண்டும் திரூருக்கு எடுத்துச் சென்றனர்.
இந்தப் படுகொலை சம்பவத்தின் கோர நினைவுகள் திரூரை விட்டு இன்னும் நீங்கவில்லை. மலபார் புரட்சியாளர்களின் உடல்கள் திரூர் கொரங்காத் ஜுமா மஸ்ஜித்திலும், கோட் ஜுமா மஸ்ஜித்திலும் புதைக்கப்பட்டன. இந்த உடல்களைப் புதைத்த தும்பேரி அலிக்குட்டி சொன்ன கதைகள் இன்னும் திரூரில் உள்ளவர்களால் நினைத்துப் பார்க்கப்படுகிறது.
பாரவண்டி படுகொலை சம்பவத்தை நினைவுகூரும்விதமாக திரூர் முனிசிபல் டவுன் ஹால், பாரவண்டிபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் நூலகங்கள், பள்ளிக்கூட கட்டங்கள்கூட பாரவண்டிபோல் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ஜாலியன் வாலாபாக் படுகொலை: அதிகார அத்துமீறலின் 100 ஆண்டு நினைவு நாள்!