கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள கொடியாளம் கிராமத்தில் மணல் திருட்டு நடைபெறுவதாக பந்தநல்லூர் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, நேற்றிரவு பந்தநல்லூர் காவல் ஆய்வாளர் தலைமையில் ஒரு குழு அமைத்து தீவிர சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது, கொடியாளம் ஊராட்சி மன்றத் தலைவர் (பாமக) கோவிந்தராஜ், தனது வயலில் இருந்து அளவுக்கு அதிகமான மணலை அனுமதியின்றி கடத்துவது கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கோவிந்தராஜின் வயலில் இருந்த ஒரு லாரி மற்றும் இரண்டு ஜேசிபிக்களை பறிமுதல் செய்த போலீசார், அவற்றின் ஓட்டுநர்களான சரவணன் மற்றும் ஆகாஷ் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கொடியாளம் ஊராட்சி மன்றத் தலைவர் கோவிந்தராஜ் தலைமறைவான நிலையில் அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.