விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலக உணவுப் பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகரன்(58), ஜூன் 18 ஆம் தேதி, கோவிந்தன் நகர் காலனியைச் சேர்ந்த குருசாமியின் (48) பெட்டிக்கடையில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக சோதனைக்கு சென்றுள்ளார். அப்போது கடைக்கு உணவுப் பாதுகாப்பு சான்றிதழ் இல்லாதது தெரியவந்துள்ளது.
சான்றிதழ் வழங்குவதற்காக ரூ.7,500 லஞ்சமும், அதன்பின் ரூ.3,500ம் கேட்டதாகக் கூறப்படுகிறது. குருசாமி மறுக்கவே, ஜூலை 2 ஆம் தேதி ஆதார் உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு ரூ.1,500 தருமாறு கூறியுள்ளார். இதுதொடர்பாக குருசாமி விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகாரளித்துள்ளார். அதனடிப்படையில், ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பிய போலீசார் மறைந்திருந்து காத்திருந்தனர்.
போலீசாரின் அறிவுறுத்தலின்படி, குருசாமி சந்திரசேகரனிடம் பணத்தை கொடுத்தபோது, மறைந்திருந்த அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்தனர். மேலும், உணவுப் பாதுகாப்பு அலுவலகத்தில் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.10,500 மற்றும் மதுபான பாட்டில் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.