சென்னை: திருநெல்வேலி மாவட்டம், பெருமாள்புரத்தைச் சேர்ந்த உதய தாட்சாயினி என்பவரும், பாளையங்கோட்டையைச் சேர்ந்த மதன் குமார் என்பவரும் கடந்த மாதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருநெல்வேலி அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.
இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் வீட்டார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை சூறையாடினர். இந்நிலையில், சாதி மறுப்பு திருமணம் செய்த பெண், தனது குடும்பத்தினர் தரப்பில் தொடர்ந்து மிரட்டல் வருவதாகவும், தங்களுக்கு பாதுகாப்பு கோரியும் சென்னை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மேலும், சாதி மறுப்பு திருமணம் செய்த இருவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவுப்படி, காதல் தம்பதி இன்று வடபழனி காவல் நிலையத்தில் ஆஜராகி, தாங்கள் வசிக்கும் இடம் குறித்த விவரங்களையும், மிரட்டல் விடுக்கும் நபர்களின் விவரங்களையும் வழங்கினர். இந்த நிலையில், இருவருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.