ஈரோடு: ஈரோடு மாவட்டம், புஞ்சைபுளியம்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணம்மாள் (81). இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் மகன்களுடன் வசித்து வந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். வயது மூப்பு காரணமாக கண்ணம்மாள் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
தனது தாயை பார்ப்பதற்காக மேட்டுப்பாளையத்தில் இருந்து மகள் சாந்தி (60) வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது உடல்நிலை மோசமடைந்து திடீரென தாய் கண்ணம்மாள் காலமானார். இதையடுத்து, தனது தாய் இறந்த துக்கம் தாங்காமல் மகள் சாந்திக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மாரடைப்பு காரணமாக அதே இடத்தில் அவரும் உயிரிழந்துள்ளார். தாய், மகள் உயிரிழந்ததைக் கண்டு குடும்பமே சோகத்தில் மூழ்கியது. இந்த தகவல் அறிந்து வந்த உறவினர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர்.