சென்னை: சேலம், சந்தியூர் ஆட்டையாம்பட்டி கிராம பஞ்சாயத்து செயலாளராக பணியாற்றிய மூர்த்தி என்பவர் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, பணியிடை நீக்கம் செய்து சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். கடந்த 2017ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து மூர்த்தி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரை வேறு இடத்தில் பணியமர்த்துவது குறித்து பரிசீலித்து முடிவெடுக்கும்படி, கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அமல்படுத்தக் கோரி பல முறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பட்டு தேவானந்த், மாவட்ட ஆட்சியரை ஆஜராக உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட ஆட்சியர் ஆஜராகாததால், அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்த நீதிபதி, விசாரணையை அக்டோபர் 1ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.