கோயம்புத்தூர்: உடுமலையைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், கிணத்துக்கடவு அருகே காரில் சென்றுள்ளார். அப்பொழுது, அதே சாலையில் ராங் ரூட்டில், மாசநாயக்கன் புதூரைச் சேர்ந்த குமார் (51), அவரது மனைவி மரகதம் (45), சதீஷ்குமார் (30), சம்பத்குமார், பழனிசாமி (51), திருமூர்த்தி ஆகிய ஆறு நபர்கள் நான்கு பைக்கில் வந்துள்ளனர்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக பாலாஜி ஓட்டி வந்த கார், 4 இருசக்கர வாகனங்களின் மீதும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே பழனிசாமி உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த கிணத்துக்கடவு போலீசார், விபத்தில் படுகாயமடைந்த 5 நபர்களை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில், குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.