விருதுநகர்: ராஜபாளையம் அருகே சேத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் சார்பதிவாளர் கார்த்திகேயன் இருசக்கர வாகனத்தில் கணக்கில் வராத ரூ.14,800 இருந்ததை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேத்தூரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதியும்போது வரக்கூடிய பொதுமக்களை மிரட்டி லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புதுறைக்கு புகார்கள் எழுந்தன. இந்நிலையில், மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் சேத்தூரில் முகாமிட்டு சார் பதிவாளர் அலுவலகத்தை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், சேத்தூர் சார்பதிவாளர் கார்த்திகேயன் தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் கிளம்பிய போது, அவரைச் சுற்றி வளைத்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரது வாகனத்தை சோதனை செய்தனர். இதில், அவரது வாகனத்தில் இருந்த 14,800 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
அவரிடம் பறிமுதல் செய்த பணத்திற்கு சரியான கணக்குகளை அவர் கூறாத நிலையில், கணக்கில் வராத 14,800-க்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் மேற்கொண்டு தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.