விருதுநகர்: மயிலாடுதுறையில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருபவர் ஜெயக்குமார் (28). இவர் கோவில்பட்டி செல்வதற்காக சென்னை - திருச்செந்தூர் ரயிலில் சென்றுள்ளார். அப்போது, ரயில் விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அவரை தாக்கிவிட்டு, அவரிடம் இருந்த செல்போனை பறித்த மர்ம நபர்கள், ஜெயக்குமாரை ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளனர்.
இதனால் பலத்த காயமடைந்த ஜெயக்குமாரை, அங்கிருந்த பொதுமக்கள் ரயில்வே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், ரயில்வே காவல்துறையினர் காயமடைந்த நபரை மீட்டு, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், இது குறித்து தூத்துக்குடி ரயில்வே காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.