“நீ வர்ற வரைக்கும் வெயிட் பன்னுவாங்களா?”.. ஷட்டரை உடைத்து கடைக்குள் புகுந்த யானை! - ELEPHANT BROKE GROCERY SHOP

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 27, 2024, 4:32 PM IST

thumbnail
மளிகை கடைக்குள் புகுந்த யானை (VIDEO CREDITS- ETV Bharat Tamil Nadu)

நீலகிரி: நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் இருக்கும் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வெளி மண்டல வனப்பகுதியில் அமைந்துள்ளது வாழைத்தோட்டம் கிராமம். இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை கிராமப் பகுதிக்குள் உலா வந்துள்ளது. 

அப்போது, அந்த பகுதியில் மோகன் என்பவருக்குச் சொந்தமான மளிகை கடையின் இரும்பு ஷட்டரை உடைத்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு மற்றும் உணவு தின்பண்டப் பொருட்களை தேடி கடையை முற்றிலும் சூறையாடி அரிசி, பருப்பை சாப்பிட்டுள்ளது. 

இவ்வாறு யானை மளிகை கடைக்குள் புகுந்துள்ளதை அறிந்த கடையின் உரிமையாளர் மற்றும் அப்பகுதி மக்கள் சத்தமிட்டு, காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், இரவு முழுவதும் கிராமப் பகுதியை விட்டு வெளியேறாமல் யானை குடியிப்பு பகுதிக்கு மத்தியில் முகாமிட்டிருந்ததால், ஜீப் வாகனங்கள் மூலம் விரட்டும் பணியில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர். 

இதனால் இரவு நேரத்தில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலை ஏற்படாமல் இருக்க வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு, கிராமப் பகுதிக்குள் நுழையும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.