கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அஞ்செட்டி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட தேவன்தொட்டி கிராமத்தில் பணம் வைத்து சூதாடுவதாக வந்த தகவலின் பேரில், போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி சம்பவ இடத்திற்குச் சென்று 4 பேரைக் கைது செய்தோடு அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
இந்த சூதாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், தேவன்தொட்டி கிராமத்தைச் சேர்ந்த ருத்ர மாதைய்யா (32) என்பவர், போலீசார் பறிமுதல் செய்த இருசக்கர வாகனங்களில் தனது வாகனத்தை திரும்ப வழங்குமாறு கேட்டுள்ளார்.
அப்போது, நீதிமன்றத்தில் அபராதம் செலுத்திய பிறகு தான் இருசக்கர வாகனம் திருப்பித் தரப்படும் என அஞ்செட்டி காவல் நிலைய போலீசார் பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ருத்ர மாதைய்யா மதுபோதையில் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி மாலை அஞ்செட்டி காவல் நிலையம் சென்று தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது.
பின்னர் அவரை மீட்ட போலீசார் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்ட ருத்ர மாதைய்யாவுக்கு அங்கு பலகட்ட தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தற்கொலை முயற்சியில் அதிக அளவில் பாதிக்கப்பட்ட ருத்ர மாதைய்யா 22 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு நேற்று (மே 2) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடல் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக கிருஷ்ணகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை தடுப்பு உதவி எண்: எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை என்பது தீர்வு அல்ல. ஆகவே, சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் மாநில தற்கொலை தடுப்பு உதவி எண் 104 அல்லது சிநேகா உதவி எண் 044-24640050-க்கு அழையுங்கள். இணைய வழித் தொடர்புக்கு 022-25521111 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.
மேலும், மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள help@snehaindia.org எனும் மின்னஞ்சல் முகவரியிலும், நேரில் தொடர்புகொள்ள சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட் 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம் சென்னை - 600028 என்கிற முகவரிக்கு நேரில் சென்று தொடர்பு கொள்ளலாம்.
இதையும் படிங்க: “சிகரெட் இல்லாம எதுக்கு கடை நடத்துற?”.. கூல்டிரிங்ஸ் கடையில் ரகளை!