விருதுநகர் கல்குவாரி விபத்து சிசிடிவி காட்சி விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள கீழ உப்பிலிகுண்டு கிராமத்தில், ஆய்வுரைச் சேர்ந்த சேதுராமன் என்பவர் பெயரில் இயங்கும் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியில் மே 1 தொழிலாளர் தினம் விடுமுறை தினமான இன்று, அங்கு பணிபுரியும் மதுரை மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த கந்தசாமி (47), தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த பெரியதுரை (25) மற்றும் குருசாமி (60) ஆகிய மூன்று பேர் கல்குவாரிக்குள் வெடி மருந்து லாரியில் இருந்து குடோனுக்கு வெடிபொருள்கள் மாற்றிக் கொண்டிருந்துள்ளனர்.
இவ்வாறு இரண்டு லாரிகளில் இருந்து வெடிபொருட்களை இறக்கிக் கொண்டிருந்த போது, அங்கு எதிர்பாராத விதமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில், அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
பின்னர், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஆவியூர் போலீசார், முதலில் ஆய்வு மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் மற்றும் அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் வள்ளிக்கண்ணு நேரில் ஆய்வு செய்தனர்.
மேலும், அப்போது உடல்கள் சிதறி கிடக்கும் இடத்திற்கு பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதேநேரம், காவல்துறையினர், வருவாய்த் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறைனயினர் மட்டும் உடல்கள் சிதறி கிடக்கும் இடத்திற்கு நேரில் சென்று, உடல்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர். மேலும், வெடி விபத்து நடைபெற்ற கல்குவாரியில், மதுரை மாநகர் வெடிபொருள் தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு போலீசார், ஆய்வாளர் ராமசாமி தலைமையில் வேறு ஏதேனும் வெடி பொருட்கள் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர்.
இதனையடுத்து, மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா அளித்த பேட்டியில், “இந்த கல்குவாரியில் வேறு எங்கேனும் வெடிபொருட்கள் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். விபத்து எப்படி நடந்தது என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என கூறினார்.
இதனிடையே, இந்த வெடி விபத்து நடந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், கல்குவாரி உரிமையாளர் சேதுராமன் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கல்குவாரியில் உள்ள வெடிபொருள் குடோன், ராஜபாளையத்தைச் சேர்ந்த ராஜ்குமார் உள்ளிட்ட 5 பேர் பெயரில் லைசென்ஸ் பெற்று இயங்கி வருவதாக கூறப்படுகிறது.
இங்கிருந்துதான் சுற்றுவட்டார கல்குவாரிகளுக்கு வெடி மருந்து கொண்டு செல்லப்படும் எனத் தெரிகிறது. வெடி விபத்து நடந்த இடத்தில் மதுரை சரக டி.ஐ.ஜி ரம்யா பாரதி நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார். மூன்றாவதாக உள்ள மற்றொரு லாரியில் வெடிபொருட்கள் முழுமையாக இருப்பதால், வெடிகுண்டு நிபுணர்கள் கல்குவாரியைச் சுற்றி முழுமையாக தண்ணீர் அடித்து அப்பகுதி முழுவதும் குளுமைப்படுத்தி, வெடிபொருட்களை வெளியே எடுக்க உள்ளனர்.
இதற்காக கல்குவாரியினுள் இருந்த பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் போலீசார் வெளியேற்றினார். மேலும், இந்த சம்பவம் குறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உரிமையாளர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இரண்டு பேர் தலைமாறைவாகியுள்ளனர். தற்போது அவர்களைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் எக்ஸ் தளப் பதிவில், “விருதுநகர் மாவட்டம் டி.கடம்பன்குளத்தில் இயங்கி வந்த தனியார் வெடிபொருள் சேமிப்புக் கிட்டங்கியில் இன்று காலை ஏற்பட்ட எதிர்பாராத வெடிவிபத்தில், அங்குப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டவுடன் அரசின் நிவாரண உதவி விரைந்து வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விருதுநகர் கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து; 3 பேர் உயிரிழப்பு.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி! - VIRUDHUNAGAR STONE QUARRY ACCIDENT