கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது காரமடை வனச்சரகம். இந்த வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. குறிப்பாக கண்டிப்புதூர் பகுதியில் மான், காட்டு பன்றிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் கண்டிப்புதூர் கிராமத்தில் உள்ள வெங்கடேசன் என்பவர் காட்டுப்பன்றியை வேட்டையாடி அதன் இறைச்சியை வீட்டில் வைத்திருப்பதாக காரமடை வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக தெரிகிறது.
அதன் பேரில் வனத்துறையினர் இரு தினங்களுக்கு முன்பு வெங்கடேசன் வீட்டிற்கு சென்று சோதனை செய்ததில் அங்கு இருந்த இறைச்சியை பறிமுதல் செய்து, அவரை கைது செய்ய முற்பட்டனர். ஆனால் அப்போது வெங்கடேசன் வனத்துறையினரிடம் தப்பி ஓட்டம் பிடித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை வெங்கடேசன் வீட்டில் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வனவர் சகாதேவன் தலைமையிலான வனத்துறை ஊழியர்கள் கண்டிப்புதூர் கிராமத்திற்கு சென்று வெங்கடேசன் வீட்டில் சோதனை செய்ய முயன்றனர். இந்த நிலையில் இதுகுறித்து அருகில் உள்ள வெங்கடேசன் உறவினர்களுக்கு தகவல் கிடைத்ததாக தெரிகிறது.
இதையும் படிங்க: வாழ்வாதாரம் கருதி ஆபத்தான முறையில் வெள்ளத்தை கடக்கும் மலை கிராம மக்கள்!
இதனை தொடர்ந்து அங்கு வந்த சிலர் வெங்கடேசன் வீட்டில் வனத்துறையினர் சோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து அவர்களை சிறை பிடித்தனர். மேலும், அவர்கள் வந்த வாகனத்தின் மீது கற்களை தூக்கி எறிந்து கண்ணாடிகளை உடைத்தனர். மேலும் வனத்துறையினரை போராட்டகாரர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி, வெளியேறுமாறு கோஷங்கள் எழுப்பியதாக கூறப்படுகிறது.
![கல்லால் வனத்துறையினர் காரை தாக்க வந்த நபர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/04-12-2024/23040743_forest-depart-3.png)
இதையடுத்து, அங்கிருந்து கிளம்பிய வனத்துறையினர், இந்த சம்பவம் குறித்து காரமடை போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின் சம்பவ இடத்திற்கு வந்த காரமடை போலீசார் வனத்துறையினரின் ஜீப்பை உடைத்தவர்கள் குறித்த விசாரணையில் ஈடுப்பட்டனர்.
![சேதமான வனத்துறையினர் ஜீப்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/04-12-2024/23040743_forest-depart-1.png)
காட்டுப்பன்றி இறைச்சி வைத்திருந்ததாக கிடைத்த தகவலின்படி வனத்துறையினர் கைது நடவடிக்கைக்கு சென்ற இடத்தில் உள்ளூர்வாசிகள் சிலரால் அவர்கள் சிறைபிடிக்கப்பட்டு, அவர்களது வாகனம் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுப்பட்டவர்கள் யார்? எதற்காக இவ்வாறு செய்தனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.