கோயம்புத்தூர்: தமிழகத்தில் அதிமுக எதிர்க்கட்சி அல்ல, பாஜக தான் எதிர்க்கட்சி என்று காட்டுவதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணமலை பெரிதும் முயற்சிகிறார் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விசிக தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் கோவையில் இன்று (டிசம்பர் 26) வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போத பேசிய அவர்,” அண்ணா பல்கலைக்கழக விவகாரம் மிகுந்த வேதனைக்குரியது. இதில் தொடர்புடைய குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது. குற்றச்செயலில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு உடனடியாக பிணை வழங்காமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து சிறைக்குள் வைத்திருந்தே விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
ஆதாய அரசியல்:
அண்ணாமலை பரபரப்பான அரசியல் செய்ய விரும்புகிறார். தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக எதிர்க்கட்சி அல்ல பாஜக தான் எதிர்க்கட்சி என்று காட்டுவதற்கு பெரிதும் முயற்சிகிறார். கைது செய்யப்பட்ட ஞானசேகரன் அரசியல் கட்சித் தலைவர்களுடன் புகைப்படம் எடுத்திருக்கிறார் என்ற காரணத்தை கூறி, அதற்கு திமுக பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுவது அப்பட்டமான ஆதாய அரசியல். அரசின் மீது குற்றம் சாட்டுவது ஏற்புடையது அல்ல.
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில், எப்.ஐ.ஆர். இல் இருந்த மாணவியின் விவரங்கள் வெளியாகி இருக்கக் கூடாது. அவ்வாறு வெளியாகியுள்ளது ஏற்புடையது அல்ல. எனவே இத்தகைய செயல் கண்டனத்திற்குரியது. அதற்குக் காரணமானவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்”என்றார்.
இதையும் படிங்க: "திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலணி அணியமாட்டேன்"-அண்ணாமலை அதிரடி சபதத்தின் முழு விவரம்!
தொடர்ந்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செருப்பு போட மாட்டேன், சாட்டையால் அடித்துக் கொள்வேன் என்று பேட்டி அளித்தது தொடர்பான கேள்விக்கு, “அண்ணாமலை லண்டன் போய் விட்டு வந்த பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை. அவர் ஏன் இப்படிப்பட்ட முடிவை எடுக்கிறார. தன்னைத்தானே வருத்திக் கொள்ளும் அகிம்சை வழி முறை என்பது காந்தியடிகளைப் போல கையில் எடுக்கிறாரா? என்று தெரியவில்லை.
காந்தியடிகள் கூட இப்படிப்பட்ட போராட்டங்களை அறிவித்தது இல்லை. உண்ணாநிலை அறப்போராட்டம் சரி. தன்னை தானே சவுக்கால், சாட்டையால் அடித்து அடித்துக் கொள்வது அதிர்ச்சியாக இருக்கிறது. அவருடைய போராட்ட அறிவிப்புகள் நகைப்புக்குரியதாக மாறிவிடக்கூடாது” என்றார்.
சிறுபான்மையினருக்கான ஒரே தலைவர் மோடி தான் என்று அண்ணாமலை கூறியது தொடர்பான கேள்விக்கு, “இது 21ம் நூற்றாண்டில் மிகச் சிறந்த நகைச்சுவை. எதிர்க்கட்சிகள் என்னை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள்.அரசியல் ஆதாய கணக்குகளின் அடிப்படையில் நாங்கள் செயல்படவில்லை எங்களுக்கு ஒரு நோக்கம் உள்ளது. தேர்தல் காலத்தில் தொலைநோக்கு பார்வையுடன் லாப நட்ட கணக்கு இல்லாமல் இயங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.