சென்னை: சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் சமஸ்கிருத தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். தொடர்ந்து நிகழ்வில் பேசிய ஆர்.என்.ரவி, “சமஸ்கிருத தினம் பல ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது. சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக சமஸ்கிருத பாரதி நிறைய முயற்சிகளை செய்துள்ளது.
சமஸ்கிருதம் கற்றுக் கொண்டவர்கள் தேசத்திற்கு பெரும் சேவை செய்கின்றனர். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் ரிஷிகள் நமக்கு அளித்த இரண்டு அழகான பரிசுகள் தர்ஷன், மொழி ஆகும். ஒளி என்பது தரிசனம், மொழி என்பது சமஸ்கிருதம். நிலப்பரப்பில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பரந்து விரிந்து கிடக்கும் பாரதம் என்ற இந்த மாபெரும் ராஜ்ஜியத்தை ரிஷிகள் உருவாக்கியுள்ளனர்.
சமஸ்கிருத தின கொண்டாட்டத்தின் போது, ஆளுநர் ரவி அவர்கள் பேசுகையில், அனைத்தையும் உள்ளடக்கிய தேசத்தையும் வியப்பூட்டும் பன்முகத்தன்மையையும் தழுவிய ஒருங்கிணைந்த பாரதத்தின் பரிணாம வளர்ச்சிக்கு சமஸ்கிருத மொழி எவ்வாறு முக்கிய பங்காற்றியுள்ளது என்பதையும் இதை சமஸ்கிருதம் எவ்வாறு… pic.twitter.com/8uHGGcCDyj
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) August 19, 2024
பாரதத்தில் பல்வேறு மொழிகள் உள்ளது, பல்வேறு உணவு பழக்கங்கள் கொண்ட மக்கள் உள்ளனர். பன்முகத் தன்மையின் முகமாக இந்தியா விளங்குகிறது. சமஸ்கிருதம் ஒரு மொழி மட்டும் அல்ல, ஒருவர் தன் வாழ்வை எவ்வாறு வாழ வேண்டும் என்பதை போதிக்கிறது. பிறரை எப்படி நடத்த வேண்டும், எப்படி மதிக்க வேண்டும் என்பதை போதிக்கிறது. சமஸ்கிருதத்தில் இருந்து தான் கலாச்சாரம் தோன்றியது.
ஆங்கில மொழி வந்த பிறகு சமஸ்கிருத மொழி பயன்பாட்டைக் குறைத்தது. ஆங்கிலம் பேசுவதை மக்கள் கவுரவமாக கருதிவிட்டனர். ஆனால், மறைமுகமாக நாம் நம் பெருமையை இழந்துவிட்டோம் என்பதை உணர தவறிவிட்டோம். சமஸ்கிருதத்தை தவிர்க்கும் தருணத்தில், நாம் நமது கலாச்சாரத்தையும் இழக்கத் தொடங்கி விட்டோம்.
சமஸ்கிருதம் ஒரு சக்தி வாய்ந்த மொழி, அறிவியல் பூர்வமான மொழி. உலகம் பல சவால்களைச் சந்தித்து வருகிறது. அறிவியல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, சமஸ்கிருத மொழியில் தான் அறிவியல் இருந்தது குறிப்பாக, நம் முன்னோர்கள் எழுதிய புத்தகங்களில் இயற்பியல் குறித்த அறிவியல் தகவல்களும் சமஸ்கிருதத்தில் தான் இருந்தது. நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு சமஸ்கிருத மொழியை எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "பிரிவினையை ஆதரிக்கும் சித்தாந்தங்களுள் திராவிடமும் ஒன்று" - ஆளுநர் ஆர்.என்.ரவி சாடல்!