சென்னை: சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக இருந்த சரத்குமார், நேற்று (மார்ச் 12) பாஜகவில் இணைந்த நிலையில், இன்று (மார்ச் 13) சென்னை கிண்டியில் உள்ள லீ மெரிடியன் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "3வது முறையாக பிரதமராக மோடி வர வேண்டும் என்ற ஒரே நோக்கோடு, இவர்களோடு இணைந்து செயல்பட்டால் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணத்தோடு வந்துள்ளேன். தொடர்ந்து கட்சி மேலிடம் என்ன சொல்கிறது என்பதை பொறுத்து கருத்துகளை கேட்டு செயல்படுவேன்" என்று தெரிவித்தார்.
இதனை அடுத்து, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, "பாஜக முன்னோடிகள் சொல்வதைச் செய்யத் தயாராக இருக்கிறேன். அவர்கள் இடும் கட்டளையை செயல்படுத்துவேன். கூட்டணியில் இருக்கும் போது எத்தனை தொகுதிகள் வேண்டும் என்று கேட்கலாம். ஆனால் கட்சியில் இணைந்த பிறகு, அவர்கள் சொல்வதைத்தான் கேட்க வேண்டும்" என்று பதிலளித்தார்.
-
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி - பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்ததைப் பற்றி பலரும், பலவிதமாக சித்தரித்து வருவதால், தன்னிலை விளக்கமாக இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். pic.twitter.com/f4VH6F2K98
— R Sarath Kumar (மோடியின் குடும்பம்) (@realsarathkumar) March 13, 2024
அதன் தொடர்ச்சியாக, பாஜகவோடு இணைய கட்சி நிர்வாகிகளைக் கேட்டு முடிவெடுக்கவில்லை என விமர்சனம் எழுவது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "ஆக்கப்பூர்வமான மற்றும் அறிவுப்பூர்வமான விமர்சனங்களுக்குப் பதில் சொல்லலாம். வைரலாக்க வேண்டும் என்ற ஆசையோடு செய்து கொண்டிருக்கிறார்கள். 'இரவு தூக்கம் வரலையாம், மனைவியிடம் கருத்துக் கேட்டாராம்' என்று சொல்கிறார்கள். மனைவியிடம் கேட்காமல் யாரிடம் கேட்பது? இந்த கருத்துக்கு செவி சாய்க்க வேண்டுமா?
ஒரே ஒரு கட்சி நிர்வாகிதான் அப்படிப் பேசி இருந்தார். அவர் மீண்டும் பேசிய வீடியோவில் 'காலதாமதமாக வந்ததால் தெரியாமல் சொல்லிவிட்டேன்' என்று சொல்லி இருப்பார். அவர் அறியாமல் செய்த தவறை அவர் உணர்ந்து வந்து மன்னிப்பு கேட்டுவிட்டார். இதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும், தேவையும் இல்லை. நேரத்தை வீணாக்க விருப்பம் இல்லை" என்று விளக்கமளித்தார்.
மேலும், பாஜகவில் உங்களுக்கு பொறுப்பு வழங்கப்படுமா என்றும், பாஜகவில் இணைந்த பிறகு நீங்கள் பாஜக மாநில தலைவராகவோ, முதலமைச்சர் வேட்பாளராகவோ ஆக வேண்டும் என கோரிக்கைகள் எழுவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "நான் பொறுப்புக்காக வரவில்லை, பொறுப்பாக இருக்க வந்துள்ளேன். யார் என்ன வேண்டுமானாலும் கூறலாம். குழப்பத்தை ஏற்படுத்தும் வேலையைப் பார்க்கிறார்கள். நான் எதில் இருந்தும் மடைமாற மாட்டேன் உறுதியாக இருப்பேன்.
அது திமுகவிற்கு நன்றாக தெரிந்திருக்க வேண்டும். கலைஞரின் இறப்புக்குக் கூட அத்தனை டூவீட் போடவில்லை. என்னைப்பற்றி, சின்ன சின்ன விசயங்களுக்குக் கூட அத்தனை டுவீட் போடுகிறார்கள். இதைப் பார்க்க என்டர்டைன்மெண்டாக இருக்கிறது. பிரதமராக மோடி மீண்டும் வரும் போதுதான் நாடு செழிக்கும். தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டில் இரு கட்சிகளும் இல்லாமல் பாஜக ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை உள்ளது" என அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் தனது 'X' வலைதளப் பக்கத்தில், "அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி - பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்ததை பற்றி பலரும், பலவிதமாகச் சித்தரித்து வருவதால், தன்னிலை விளக்கமாக இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்" என்று கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “1996ஆம் ஆண்டு அன்றைய ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அக்கட்சியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய முடிவு செய்ததே என் அரசியல் பயணத்தின் துவக்கம். அரசியல் அனுபவம் அதிகம் இருந்த போதும், அன்று நான் கொடுத்த ஒற்றை எதிர்ப்பு அறிக்கை, திமுகவின் முன்னோடிகளை என் இல்லம் நோக்கி பயணிக்கச் செய்தது.
எந்த ஒரு சுயலாபத்திற்காகவும், சுய நலனுக்காகவும் அல்லாமல், எந்த ஒரு அரசியல் சூழ்ச்சியும் அறியாமல், திராவிட முன்னேற்றக் கழகத்தையும், அவர்களின் கூட்டணியான தமிழ் மாநில காங்கிரஸையும் ஆதரித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சி பீடத்தில் அமர்த்தியதன் பங்கு என்னையும், என்னைச் சார்ந்த ரசிக பெருமக்களையும், தமிழக மக்களையும் சாரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.