மதுரை: சுமார் 2 ஆண்டுகளாக 15 க்கும் மேற்பட்ட ரயில்களின் கழிவறைகளில் இருந்து குழாய்களை மட்டும் கழட்டி விற்பணை செய்து வந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருடிய பொருட்களை பெற்ற இரண்டு கடை உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மதுரை கோட்டத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மதுரை கோட்டத்தில் இயங்கும் ரயில்களில் உள்ள கழிவறை குழாய்கள் அவ்வப்போது காணாமல் போவதாகவும், இதன் காரணமாக கழிவறையில் தண்ணீர் இல்லாத நிலை ஏற்படுவதாகவும் தொடர்ந்து பயணிகள் புகார் தெரிவித்து வந்துள்ளனர்.
இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தியதில், மர்ம நபர்கள் ரயில் பெட்டியில் உள்ள கழிவறைகளில் குழாய்களை மட்டும் திருடி செல்வது தெரியவந்தது. இது தொடர்பாக ரயில்வே போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரயில் பயணத்தின் போது காவல்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் பையில் இரும்பு பொருட்களுடன் ரயில் நிலையத்துக்குள் சுற்றித்திரிந்த கோ புதூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் மற்றும் செல்வம் ஆகிய இருவரையும் போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் போது அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மது அருந்துவதற்காக இருவரும் சேர்ந்து சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக 15 க்கும் மேற்பட்ட ரயில்களின் கழிவறையில் உள்ள குழாய்களை மட்டும் கழட்டி, விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார், திருடிய பொருட்களை பெற்ற இரண்டு கடை உரிமையாளர்கள் உட்பட மொத்தம் நான்கு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
நூதன முறையில், ரயில் கழிவறைகளில் இருந்த குழாய்களை மட்டும் திருடி விற்பனை செய்து வந்த சம்பவம், ரயில் அதிகாரிகள் மற்றும் பயணங்களில் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.