சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணனை தமிழ்நாடு அரசு நியமனம் செய்துள்ளது. அவரது நியமனத்துக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை, தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர். பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு ஆய்வுகளுக்கு புதிய உந்துதலை அளிக்கும்.
ஆர். பாலகிருஷ்ணன் ஒரு புகழ்பெற்ற தமிழ்மொழி அறிஞரும், ஆட்சிப் பணி வல்லுநரும் ஆவார். தமிழ் இலக்கியத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்ற இவர், தமிழில் குடிமைப்பணித் தேர்வுகளை எழுதி வென்ற முதல் தமிழ் மாணவர். ஆய்வாளர், படைப்பாளர் என்ற இரு தளங்களில் செயல்படும் இவர் 15 நூல்களின் ஆசிரியர். சிந்துவெளிப் பண்பாட்டு தொல்லியல் தரவுகளை சங்க இலக்கியங்கள் மற்றும் தமிழ்நாட்டு அகழாய்வுத் தரவுகளோடு ஒப்பிட்டு இவர் எழுதியுள்ள ஆங்கிலம் மற்றும் தமிழ் நூல்கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன.
இதையும் படிங்க: வடமாநிலங்களில் எங்கு தமிழ் கற்றுக் கொடுக்கப்படுகிறது? திருமாவளவன் எம்பி கேள்வி!
இந்திய ஆட்சிப் பணியில் 1984-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், ஒடிசா அரசிலும் இந்தியத் தேர்தல் ஆணையத்திலும் 34 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியவர். ஒடிசா மாநிலத்தின் நிதித்துறைச் செயலர், கூடுதல் தலைமைச் செயலாளர், வளர்ச்சி ஆணையர் போன்ற பொறுப்புகளை வகித்தவர்.
2018-ல் பணி ஓய்வு பெற்ற இவர் அதன் பிறகு முன்னாள் ஒடிசா மாநில முதல்வரின் தலைமை ஆலோசகராக 2024 வரையில் பொறுப்பு வகித்தார். திராவிட மொழிக்குடும்பத்தின் பரவல், சிந்து சமவெளிப் பண்பாடு, தொல்தமிழ்த் தொன்மங்கள், சங்க இலக்கியங்கள் மற்றும் திருக்குறள் குறித்த இவரது செயல்பாடும் பங்களிப்பும் உலகத்தமிழர்களால் பாராட்டப்பட்டுள்ளது,"என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ், தமிழர் வரலாறு தொடர்பான ஆய்வுகளில் ஈடுபடுவதற்காக பல்வேறு பயணங்களை மேற்கொண்டு வருகிறார். தமிழர் மரபு குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார். தமிழ் குறித்து தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வரும் ஆர்.பாலகிருஷ்ணன் உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள், அரசியல் பிரமுகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். முகநூலிலும் அவருக்கு பலர் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.