சென்னை: இந்திய பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவமழை அடுத்த 4 நாள்களில் விலக உள்ளதைத் தொடர்ந்து, தென்னிந்தியப் பகுதிகளில் கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று வீசும் நிலையில், தென்னிந்தியப் பகுதிகளில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.
குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களுக்கு அடுத்து இரண்டு நாட்களுக்கு அதி கன மழை பெய்வதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் அதிக கன மழை பெய்யும் என்பதால் வேளச்சேரி பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் நான்கு சக்கர வாகனமான கார்களை வேளச்சேரி - பள்ளிக்கரணை இணைப்பு மேம்பாலத்தில் வரிசையாக நிறுத்தி நிறுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: மழை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்; பொதுமக்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்..!
கடந்த வருடம் வேளச்சேரி பகுதியில் கனமழை பெய்த போது, குடியிருப்புகள் முழுகும் அளவிற்கு மழைநீர் தேங்கியது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கார்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்தன. சென்னையில் இருந்து வெளியேறும் மழை நீர், வேளச்சேரி, பள்ளிக்கரணை வழியாக சதுப்பு நிலம் செல்வதால் அந்த பகுதியில் பெருமளவு பாதிப்பு ஏற்படும்
இதனால் வேளச்சேரி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் கார்களை வேளச்சேரி பள்ளிக்கரணை இணைப்பு மேம்பாலத்தின் மேல் நிறுத்தி வைத்துள்ளனர். மேம்பாலத்தின் மேல் ஓரமாக கார்கள் அணிவகுத்து நிற்பதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏதும் ஏற்படுகிறதா? என போக்குவரத்து போலீசார் அங்கு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து வேளச்சேரி போக்குவரத்து ஆய்வாளர் கதிரவனிடம் கேட்டபோது, "கனமழையால் தங்கள் குடியிருப்புகளில் மழைநீர் தேங்கி, அதனால் கார் பழுதாகிவிடுமோ என அஞ்சி சுமார் 50க்கும் மேற்பட்டோர் வேளச்சேரி பள்ளிக்கரணை இணைப்பு மேம்பாலத்தில் காரை நிறுத்தி வைத்துள்ளனர்.
மேம்பாலத்தின் சாலை ஓரத்தில் கார் நிறுத்தி வைத்திருப்பதால் போக்குவரத்திற்கு தற்போது வரை எந்தவொரு இடையூறும் ஏற்படவில்லை. ஆனால் மேம்பாலத்தின் மீது நிறுத்த வேண்டாம் வேறு எங்காவது காரை பத்திரமாக நிறுத்திக் கொள்ளுங்கள் என கார் உரிமையாளர்களிடம் போக்குவரத்து போலீசார் சார்பில் அறிவுறுத்தியுள்ளோம்.
ஆனால் 10 லட்சம் மதிப்புள்ள காரை மழை நீரில் நிறுத்தி வீணாக்க முடியாது அதற்கு பதிலாக போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தால் அதை கட்டிக் கொள்கிறோம் என்பதுதான் கார் உரிமையாளர்களின் பதிலாக உள்ளது. இதேபோல் வேறு மேம்பாலத்தின் மீதும் கார் உரிமையாளர்கள் காரை நிறுத்தி வருகின்றனர்" என்று போக்குவரத்து ஆய்வாளர் கதிரவன் கூறினார்.