திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் 1880 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்ட பழமையான மத்திய சிறைச்சாலை உள்ளது. சுமார் 118 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த சிறைச்சாலையில் 297 அறைகளில், சுமார் 1,333 கைதிகள் வரை அடைத்து வைக்கலாம்.
ஏறக்குறைய ஆயுள் தண்டனை கைதிகள் தண்டனைப் பெற்ற கைதிகள், விசாரணை கைதிகள் என ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் அடைத்துவைக்கப்பட்டு இருப்பது வழக்கம். இந்நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்கசி போன்ற தென் மாவட்டங்களில் சாதி ரீதியான கொலை சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன.
இதில் தண்டனை பெறும் கைதிகள் சிறைக்குள் வைத்தும் சாதி ரீதியாக மோதி கொள்ளும் சம்பவம் நடைபெற்றதால் பாளையங்கோட்டை சிறைச்சாலையில் சாதி வாரியாக கைதிகள் குழுக்களாக பிரிக்கப்படுவதோடு, இரவு நேரத்தில் நான்கு செல்களில் அடைத்து வைப்பது வழக்கம். காலையில் அவர்களை வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.
இந்த நிலையில், விசாரணை கைதிகளாக உள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த மருதுவேல், பாலசுப்பிரமணியன், சுந்தரமூர்த்தி ஆகியோர் இடையே இன்று (பிப்.7) சிறை வளாகத்திற்குள் மோதல் ஏற்பட்டது. இதில் மருதுவேலை சாப்பாட்டு பிளேட் மற்றும் கம்பியைக் கொண்டு தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்து பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பற்றி பெருமாள்புரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து இந்த தாக்குதலில் காயமடைந்த மருதுவேல், தூத்துக்குடி மாவட்டம் பேராவூரணி அண்ணா நகரைச் சார்ந்தவர். இவர் 2019ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடந்த ஒரு கொலை வழக்கு சம்பந்தமாக விசாரணை கைதியாக பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து வருகிறார்.
இதையும் படிங்க: ஆட்டோ சங்கரின் சகோதரர் மோகனுக்கு ஒரு மாதம் விடுப்பு; சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!