சென்னை: காஞ்சிபுரம் அருகே உள்ள நத்தப்பேட்டை கிராமத்தில் சுமார் 550 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரி மூலம் சுமார் 1,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைந்து வருகின்றன. தவிர மீன்பிடித்தலும் இந்த ஏரியில் முக்கிய தொழிலாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், மஞ்சள் நீர், கால்வாய் வழியாக நத்தப்பேட்டை ஏரியில் விடப்படுகின்றன. நத்தப்பேட்டை ஏரியின் உபரிநீர் வையாவூர் ஏரி, களியனூர் ஏரி, உழையூர் ஏரி, பூசிவாக்கம் ஏரி, ஊத்துக்காடு ஏரி ஆகிய ஏரிகளுக்கு செல்கிறது.
நத்தப்பேட்டை ஏரியில் கழிவுநீர் கலப்பதால் இந்த ஏரி மட்டுமல்லாமல் மற்ற ஏரிகளின் நீரும் மாசடைகின்றன. வீட்டுக் கழிவுகள் மட்டுமன்றி, சாயப்பட்டறை கழிவுகளும் ஏரிகளில் அதிகளவில் கலப்பதால் சுமார் 1,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிலையில், இது தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது. விசாரணையின் போது, நத்தப்பேட்டை, வையாவூர் ஏரிகளை 50 கோடி ரூபாய் செலவில் அழகுபடுத்த கருத்துக்கேட்பு அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.