நாசிக்: தமிழகததை சேர்ந்த விஞ்ஞானியிடம் ஆளுநர் பதவி வாங்கித் தருவதாக கூறி ரூ.5 கோடி மோசடி செய்த நாசிக்கை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து பேசிய நாசிக் குற்றப்பிரிவு போலீசார்,"கந்தர்வ நகரி பகுதியில் நாசிக் சாலையில் வசிக்கும் நிரஞ்சன் சுரேஷ் குல்கர்னி(40) என்ற நபர், தமக்கு பெரும் அரசியல் தலைவர்களுடன் தொடர்பு இருப்பதாகவும், அந்த தொடர்புகள் மூலம் உங்களுக்கு(நரசிம்ம ரெட்டி) ஆளுநர் பதவி வாங்கத் தரமுடியும். அதற்கு சேவை கட்டணமாக ரூ.15 கோடி கேட்டிருக்கிறார்.
இந்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி விடுதி ஒன்றில் நரசிம்ம ரெட்டியை சந்தித்த குல்கர்னி இது போன்ற வாக்குறுதியைக் கொடுத்திருக்கிறார். அப்போது நரசிம்ம ரெட்டியிடம் இந்திய அரசின் முத்திரைகள் கொண்ட சில ஆவணங்களை காட்டியிருக்கிறார். தமக்கு அரசியல்வாதிகளை தெரியும் என்பதால் எளிதாக ஆளுநர் பதவி வாங்கி விடலாம் என்றும் கூறியிருக்கிறார். இதனை நம்பி அவருக்கு பணம் தருவதாக நரசிம்ம ரெட்டியும் கூறியிருக்கிறார். குல்கர்னியை நம்பி, நரசிம்ம ரெட்டியும் அவரது உறவினர்களும் இரண்டு மாதங்களில் 60 லட்சம் ரூபாய் ரொக்கமாக குல்கர்னிக்கு கொடுத்திருக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக ரூ.4.49 கோடியை குல்கர்னியின் வங்கி கணக்குக்கு ஆன்லைனிலும் டிரான்ஸ்பர் செய்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து.. நெருங்கிய உறவுக்கார இளைஞர் வெறிச்செயல்!
இதன் பின்னர் வாக்குறுதி அளித்தபடி ஆளுநர் பதவி அளிப்பது பற்றி நரசிம்ம ரெட்டியிடம் குல்கர்னி பேசுவதை தவிர்த்திருக்கிறார். பலமுறை போன் செய்தும் அவர் எடுக்கவில்லை. மேலும் நேரிலும் சந்திக்க முயன்றபோது அவர் தலைமறைவானது தெரிந்தது. ஒரு கட்டத்தில் நரசிம்ம ரெட்டியை கொன்று விடுவதாக குல்கர்னி கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த நரசிம்ம ரெட்டி கடந்த 7ஆம் தேதி போலீசில் புகார் அளித்துள்ளார்,"என்றனர்.
இதையடுத்து நாசிக் நகரின் குற்றப்பிரிவு துணை காவல் ஆணையர் பிரசாந்த் பச்சாவ, உதவி காவல் ஆணையர் சந்தீப் மிட்கே ஆகியோர் உத்தரவின் பேரில் இந்த வழக்கை குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கத் தொடங்கினர். குல்கர்னியின் வங்கி கணக்குகள், செல்போன் ஆகியவற்றைக் கொண்டு தொழில்நுட்ப ரீதியாக அவர் தங்கியிருந்த இடத்தை தெரிந்து கொண்டனர். இதையடுத்து கந்தர்வ நகரியில் கடந்த 7ஆம் தேதி அவரை கைது செய்தனர். 8ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
12ஆம் வகுப்பு மட்டுமே படித்தவர் நிரஞ்சன் சுரேஷ் குல்கர்னி. பணக்காரர் போல வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நிரஞ்சன், இது போன்று போலியான மோசடிகளை செய்து பணம் திரட்டுவதை தொழிலாக கொண்டிருந்திருக்கிறார். அதே போல தமக்கு அரசு திட்டங்களின் கீழ் 100 ஏக்கர்கள் வரை சொந்தமாக நிலம் இருப்பதாகவும் போலியான ஆவணங்களை தயாரித்துள்ளார். மனைவியிடம் இருந்து நிரஞ்சன் சுரேஷ் குல்கர்னி பிரிந்து வாழ்வதாகவும் போலீசார் தெரிவித்தனர்.