சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் பம்பரம் சின்னத்தை ஒதுக்கத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரிய மதிமுக மனு, நாளை (செவ்வாய்க்கிழமை) தலைமை நீதிபதி முன் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்துள்ள மனுவில், "கடந்த 1996ஆம் ஆண்டு முதல் சட்டமன்றம், மக்களவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில், பம்பரம் சின்னத்தில் தான் மதிமுக தொடர்ந்து போட்டியிட்டு வந்தது.
ஆனால், கடந்த 2006ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 6 சதவிகிதத்திற்குக் குறைவான வாக்குகள் பெற்றதாகக் கூறி, கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. 2014ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது போல, எதிர்வரும் மக்களவைத் தேர்தலிலும் பம்பரம் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், தேர்தல் ஆணையத்திடம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணப்பித்து உள்ளோம்" என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, கடந்த மார்ச் 7ஆம் தேதி மதிமுக தேர்தல் சின்னம் வழக்கில் இரண்டு வாரங்களில் முடிவெடுக்கத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.
இந்நிலையில், தேர்தல் மனு தாக்கல் நடைமுறை முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் தங்கள் கோரிக்கை மனு மீது எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. மதிமுக முறையீட்டினை ஏற்ற நீதிபதிகள், நாளை தேர்தல் சின்னம் வழக்கு விசாரணை செய்யப்படும் என அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தென்காசியில் திமுக Vs பாஜக இடையே தான் போட்டி: ஜான் பாண்டியன் கூறியது என்ன? - Tenkasi Candidate John Pandian