சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்த நளினி, முருகன், சாந்தன் உள்பட ஏழு பேரை விடுதலை செய்து, கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, விடுதலை செய்யப்பட்ட இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்களான முருகன், சாந்தன் உள்ளிட்டோர் கடவுச்சீட்டு மற்றும் விசா இல்லாததால், திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நோய் வாய்ப்பட்டுள்ள தனது தாயைக் கவனிப்பதற்காக, தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் கோரி சாந்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ்பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில், திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் சாந்தனுக்கு இலங்கை திரும்புவதற்கான தற்காலிகப் பயண ஆவணத்தை இலங்கை தூதரகம் வழங்கியுள்ளதாகவும், அந்த ஆவணங்கள் மத்திய அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், இதுவரை தங்களுக்கு அந்த ஆவணங்கள் கிடைக்கவில்லை என்பதால், தற்போது நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட ஆவணங்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தார். அதனடிப்படையில், சாந்தனை இலங்கைக்கு அனுப்புவதற்கான உத்தரவு ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில், “பிப்ரவரி 22ஆம் தேதி சாந்தனை இலங்கைக்கு அனுப்ப முடிவு செய்ததாகவும், ஆனால் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அனுப்ப முடியவில்லை. தொடர்ந்து பிப்ரவரி 27ஆம் தேதி அனுப்ப முயற்சி செய்தபோது, மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாந்தனுக்கு இதய பாதிப்பு காரணமாக, பிப்ரவரி 28ஆம் தேதி உயிரிழந்தார். அதனால் அனுப்ப முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசுத் தரப்பில், இலங்கை தூதரகம் புதிதாக பயண அனுமதி வழங்கினால், உடனடியாக உடலை இலங்கை எடுத்துச் செல்ல அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, பயண ஆவணங்களைச் சரிபார்க்க மூத்த ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து, சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும், உத்தரவை நிறைவேற்றியது குறித்த விளக்கத்தை மார்ச் 4ஆம் தேதி நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: அழைப்பு விடுக்கும் திமுக.. பேச்சுவார்த்தைக்கு செல்ல மறுக்கும் விசிக.. அதிருப்திக்கு காரணம் என்ன?