சென்னை: ஜாதி, மத அடிப்படையில் அரசியல்வாதிகள் தேர்தலை சந்திக்கும் நடைமுறையில் மாற்றம் வரும் என சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியைச் சேர்ந்த ராஜேஷ் அனுார் மகிமைதாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், 'ஜாதி, மதம் மற்றும் மொழிரீதியாக வாக்குகளை சேகரிப்பது ஊழல் நடவடிக்கை என கடந்த 2017 ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஆனால், தேர்தல் நேரங்களிலும், தேர்தல் அல்லாத காலங்களிலும் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசியல் லாபத்துக்காக, ஜாதி, மதம், மொழி ரீதியாக வாக்காளர்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துவதாகக் கூறி வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியைச் சேர்ந்த ராஜேஷ் அனுார் மகிமைதாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதைக் கண்காணிக்க, ஓய்வுபெற்ற நீதிபதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய சுதந்திரமான ஆணையத்தை அமைக்க உத்தரவிட வேண்டும்.' எனவும் தமது மனுவில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையும் படிங்க: ஆன்லைன் விளையாட்டு தொடர்பான அரசின் உத்தரவில் தலையிட முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்!
இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில், 'ஜாதி, மத அடிப்படையில் தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.' என தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் பதில் மனுவை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும், 'இந்தியா போன்ற பெரிய நாட்டில் மாற்றத்தை ஒரே இரவில் கொண்டு வரமுடியாது என்றும், ஜனநாயகத்தில் இந்தியா அடியெடுத்துவைத்து 75ஆண்டுகள் ஆனாலும் இன்னும் குழந்தை பருவத்தில் தான் இருக்கிறது. இந்த மாற்றங்கள் ஏற்பட இன்னும் சில காலம் ஆகும்' எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், ' அப்போது குடிமக்களும், அரசியல்வாதிகளும் ஜாதி, மத அடிப்படையில் தேர்தலில் போட்டியிடமாட்டார்கள்' என்று நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.