சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு சரியாக இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதியில் 950 வேட்பாளர்களும், புதுச்சேரி தொகுதியில் 26 வேட்பாளர்களும் களம் காணும் நிலையில், தமிழகத்தில் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் மற்றும் புதுச்சேரியில் 10 லட்சத்து 26 ஆயிரத்து 699 வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர்.
அந்த வகையில், நாடே ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2024 மக்களவைத் தேர்தலில், முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த நிலையில், ஜனநாயகத்தின் குடிமக்களாக தங்களின் கடமைகளை ஆற்ற, காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் தற்போது வாக்களித்து வருகின்றனர்.
மேலும், சென்னையில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் தொடர்ந்து வாக்களித்து வருகின்றனர். இதில் முதல் ஆளாக, தென் சென்னைக்கு உட்பட்ட திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்த நடிகர் அஜித்குமார், காத்திருந்து தனது வாக்கை செலுத்தினார். மேலும், சேலம் சிலுவம்பாளையத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்களிக்க குடும்பத்துடன் வருகை தந்த நிலையில், தற்போது அவரும் வாக்களித்துள்ளார்.
திருச்சி தில்லை நகர் மக்கள் மன்றம் வாக்குச்சாவடி மையத்தில் அமைச்சர் கே.என்.நேரு வாக்கு செலுத்தியுள்ளார். சென்னை சாலி கிராமத்தில் தென்சென்னை வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் வாக்களித்தார். தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நாகையில் தனது வாக்கை செலுத்தினார். காரைக்குடி அருகே கண்டனூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வாக்களித்தார்.
மக்களோடதூத்துக்குடியில் சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வாக்களித்தார். திருச்சி கிராப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார். கம்பம் அருகே நாராயணதேவன்பட்டியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் வாக்களித்தார். நீலகிரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் வாக்கு செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து, சென்னை வளசரவாக்கத்தில் மக்களோடு மக்களாக நீண்ட வரிசையில் காத்திருந்த நடிகர் சிவகார்த்திகேயன், தனது குடும்பத்துடன் வாக்கு செலுத்தினார். தொடர்ந்து, கரூர் தொகுதிக்குட்பட்ட அரவக்குறிச்சி தொட்டம்பட்டியில், கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை வாக்களித்தார்.
இன்று மாலை 6 மணி வரை பொதுமக்கள் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுள்ளன. இந்நிலையில், வாக்குச்சாவடிகளின் நிலவரங்கள் வெப் கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வாக்குப்பதிவு தொடங்கியது - Lok Sabha Election 2024