சென்னை: சைதாப்பேட்டை- தாடண்டர் பகுதியில் அரசுப் பணியாளர்களுக்காக கட்டப்படும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வாடகைக் குடியிருப்புகளில், ஒதுக்கீடு பெற ஏராளமானோர் காத்திருக்கும் சூழலில், பொது ஒதுக்கீடுகள் என்பது முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். மேலும், இத்தகைய குடியிருப்புகளில் 25 சதவீதம் தலைமைச் செயலக அரசுப் பணியாளர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தலைமைச் செயலகச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் தலைவர் கு.வெங்கடேசன், பொருளாளர் பிரபா முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “சென்னை - சைதாப்பேட்டை நாடண்டர் நகரில் தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகைக் குடியிருப்புத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலமாக புதியதாக குடியிருப்புகள் கட்டப்பட்டு மார்ச் 8 ஆம் தேதி முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.
அரசு ஊழியர்களுக்கு 25 சதவீத ஒதுக்கீடு: வீட்டுவசதி வாரியத்தினால் சிதிலமடைந்த பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு ஒதுக்கீடு வழங்கப்படும் போது, ஏற்கனவே அந்தக் குடியிருப்புகளுக்கு பதிவு செய்த பணியாளர்களின் பதிவு மூப்பு அடிப்படையில், ஒதுக்கீடு வழங்கப்படும் நடைமுறையானது காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. அதோடு தலைமைச் செயலகப் பணியாளர்களுக்கு 25 சதவீதம் ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையினை நெடுங்காலயாக வைத்து வருகிறது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அரசு அலுவலர் குடியிருப்புகள் ஒதுக்கீடு, குலுக்கள் முறையில் நடைபெறும் என்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித்துறை தெரிவித்திருந்தது. அதன்படி, இதுநாள்வரை ஒதுக்கீட்டிற்காக பதிவு செய்து, பதிவு மூப்பின் அடிப்படையில் காத்திருக்கும் பணியாளர்களுக்கு எதிரானது.
இதையும் படிங்க: அரசு ஊழியர்கள் பிரச்னை: வெற்று அறிக்கை நம்பிக்கை தராது என அரசை தாக்கிய சங்கம்!
ஒதுக்கீடு மறுப்பு: அரசுப் பணியாளர்களுக்காக கட்டப்படும் வாடகைக் குடியிருப்புகளில், காலங்காலமாக பொது ஒதுக்கீடு என்ற போர்வையில், ஆட்சிப் பொறுப்பில் உள்ள கட்சிகளின் அரசியல் பிரமுகர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யும் நடைமுறையானது பின்பற்றப்பட்டுள்ளது. இதனால் பத்தாண்டுகளுக்கு மேலாக வாடகைக் குடியிருப்பிற்குக் காத்திருக்கும் பணியாளர்களுக்கு ஒதுக்கீடு மறுக்கப்படும் சூழ்நிலை உள்ளது.
பொது ஒதுக்கீட்டின் அடிப்படையில் வாடகை குடியிருப்பினை பெறும் நபர்கள், அக்குடியிருப்பினை காலி செய்யாமல் தலைமுறையாக தங்களுக்கு அரசால் நிரந்தர வீடு வழங்கப்பட்டுள்ளதைப் போல் வாழ்ந்து வருகிறார்கள. அரசுப் பணியாளர்கள் பாதிக்கப்படுவது குறித்து பணியாளர் சங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. இதில், பொது ஒதுக்கீட்டின் கீழ், அரசுப் பணியாளர்கள் அல்லாதவர்களுக்கு வாடகை வீடு ஒதுக்கீடு செய்ய நீதிமன்றம் தடையும் விதித்துள்ளது.
ஆனால், சைதாப்பேட்டை- தாடண்டர் நகரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தினால் புதியதாகக் கட்டப்பட்ட அரசு வாடகைக் குடியிருப்பில், பொது ஒதுக்கீட்டில் வீடு ஒதுக்கீடு மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இது, பொது ஒதுக்கீட்டில் வீடு ஒதுக்கீடு செய்வதற்கான நடவடிக்கைகளுக்காக காலம் தாழ்த்தப்படுவதாகவே கருதபடுகிறது.
எனவே, அரசுப் பணியாளர்களுக்காக கட்டப்படும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வாடகைக் குடியிருப்புகளில், ஒதுக்கீடு பெற ஏராளமானோர் காத்திருக்கும் சூழ்நிலையில், பொது ஒதுக்கீடுகள் என்பது முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். மேலும், இத்தகைய குடியிருப்புகளில் 25 சதவீதம் தலைமைச் செயலகப் பணியாளர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு செய்ய வேண்டும்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்