சென்னை: பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் இருந்து, சென்னை வரும் ஏர் பிரான்ஸ் பயணிகள் விமானம், வழக்கமாக மாலை பாரிஸில் இருந்து புறப்பட்டு, நள்ளிரவு 12.05 மணிக்கு சென்னைக்கு வந்து சேரும். பின், மீண்டும் அதே விமானம் அதிகாலை 2.05 மணிக்கு, சென்னையில் இருந்து பாரிஸ் நகருக்கு புறப்பட்டுச் செல்லும்.
இந்நிலையில், இந்த விமானம் நேற்று (மார்ச் 18) 317 பயணிகளுடன் பாரிஸ் நகரில் இருந்து புறப்பட்டுள்ளது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், மீண்டும் பாரிஸ் நகருக்கே சென்று தரை இறங்கியது. அதன் பின்னர், அந்த விமானம் சரி செய்யப்பட்டு, 5 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக இன்று (மார்ச் 19) அதிகாலை 5.30 மணிக்கு 317 பயணிகளுடன் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.
இதற்கிடையே, சென்னையிலிருந்து இன்று அதிகாலை 2.05 மணிக்கு பாரீஸ் நகருக்குச் செல்ல இருந்த ஏர் பிரான்ஸ் விமானத்தில் பயணம் செய்ய 326 பயணிகள் காத்திருந்தனர். இந்தப் பயணிகள் அனைவரும் நேற்று இரவு 11 மணிக்கு முன்னதாகவே சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து, அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர்.
ஆனால், பாரிஸ் நகரில் விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்டு வந்த விமானம், மீண்டும் பாரிசுக்கே திரும்பிச் சென்று விட்டதாகவும், அது தாமதமாக வந்து செல்லும் என்றும் பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டதால், பயணிகள் 326 பேரும் பல மணி நேரம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தவித்துக் கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில், அந்த விமானம் இன்று அதிகாலை 5.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த நிலையில், பாரிஸ் செல்வதற்கு காத்துக் கொண்டிருந்த 326 பயணிகளும் விமானத்தில் ஏற்றப்பட்டனர். அதன் பின்பு, ஏர் பிரான்ஸ் விமானம் சென்னையில் இருந்து 5 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக, இன்று காலை 7.15 மணிக்கு 326 பயணிகளுடன் பாரிஸ் நகருக்கு புறப்பட்டுச் சென்றது.
ஏர் பிரான்ஸ் விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பாரிஸில் இருந்து சென்னை வர இருந்த 317 பயணிகள் மற்றும் சென்னையில் இருந்து பாரிஸ் செல்லவிருந்த 326 பயணிகள் என மொத்தம் 643 பயணிகள் பல மணி நேரமாக தவிப்புக்கு உள்ளாகினர்.
இதையும் படிங்க: மக்களவைத் தேர்தல் அறிவிப்பு எதிரொலி; முழு பாதுகாப்பு வளையத்தில் சென்னை விமான நிலையம்!