சென்னை: அந்தமானில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, சென்னையில் இருந்து 142 பயணிகளுடன் இன்று (மே 22) அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்ற ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அந்தமானில் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளான நிலையில், பயணக் கட்டணம் திருப்பி அளிக்கப்படும் அல்லது டிக்கெட்டுகளை வேறு தேதிகளுக்கு மாற்றிக் கொள்ளலாம் என விமான நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று காலை சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அந்தமான் புறப்பட்டுச் சென்றது. 142 பயணிகள் பயணித்த இந்த விமானம், இன்று (மே 22) மதியம் அந்தமான் வான் வெளியை நெருங்கியபோது, அந்தமானில் கடும் சூறைக்காற்றுடன் மோசமான வானிலை நிலவிக் கொண்டு இருந்துள்ளது. இதை அடுத்து விமானம், அந்தமானில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்துக் கொண்டே இருந்துள்ளது.
நீண்ட நேரமாகியும் வானிலை சீரடையாமல் இருந்ததை அடுத்து, விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு இது குறித்து விளக்கியுள்ளார். இதையடுத்து, விமானத்தை மீண்டும் சென்னைக்கு திருப்பிக் கொண்டு வரும்படி விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து, அந்த விமானம் இன்று பிற்பகல் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்து தரை இறங்கியது. பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டனர்.
அதன் பின்னர், அந்தமானில் நிலவும் மோசமான வானிலை காரணமாக விமானம் இன்று ரத்து செய்யப்படுவதாகவும், மீண்டும் விமானம் நாளை (மே 23) சென்னையில் இருந்து அந்தமான் புறப்பட்டுச் செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் விமான நிறுவன அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து விமான நிறுவன அதிகாரிகள் பயணிகளிடம், “நாங்கள் பயணிகள் பாதுகாப்பு காரணமாக மோசமான வானிலை நிலவியதால் அங்கு தரையிறங்காமல் வந்துவிட்டோம். நாளையோ இல்லையேல் வேறு ஏதாவது ஒரு நாளோ நீங்கள் பயணம் செய்யலாம். அதற்கு தகுந்தாற்போல் உங்கள் பயண டிக்கெட்டுகளை மாற்றிக் கொடுக்கிறோம். இல்லையென்றால், உங்கள் பயண கட்டணம் விதிமுறைகளின் படி திருப்பி அளிக்கப்படும்” என்று கூறியுள்ளனர். இதை அடுத்து பயணிகள் வேறு வழியின்றி டிக்கெட்டுகளை வேறு தேதிகளுக்கு மாற்றிக்கொண்டு சென்னை விமான நிலையத்தை விட்டுப் புறப்பட்டு சென்றனர்.