தேனி: தேனி மாவட்டம், போடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 55 வயது பெண். இவரது கணவர் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று, தற்போது கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு பெண் உள்ளனர்.
மூவருக்கும் திருமணம் ஆன நிலையில், அப்பெண் மட்டும் தனிமையில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக கணவர் மற்றும் மகன்கள் மூவரும் தனது தாயாரை தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளனர். ஆனால், இரண்டு நாட்களாக அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில், அக்கம் பக்கத்தில் உள்ள நபர்களிடம் தொடர்பு கொண்டுள்ளனர்.
பின்னர், வீட்டின் அருகே சென்று பார்த்த அவர்கள் துர்நாற்றம் வீசியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே, அவர்கள் போடி தாலுகா காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அப்பெண்ணின் கைகள் கட்டப்பட்ட நிலையில், உடைகள் சரியாக இல்லாத நிலையில் கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து போடி சரக காவல்துறை கண்காணிப்பாளர் பெரியசாமி தலைமையிலான காவல்துறையினர், கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அந்த வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு, அப்பெண்ணின் ஆவணங்கள், நகைப் பெட்டிகள் ஆகியவை சிதறிக் கிடந்த நிலையில், நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டாரா? இல்லை வேறு ஏதும் காரணம் இருக்கிறதா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கிருஷ்ணகிரியில் 13 வயது பள்ளி சிறுமி பலாத்காரம்.. முன்னாள் நாதக நிர்வாகி உட்பட 8 பேர் கைது!