சென்னை: சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி, தனி விமானம் இன்று காலை 9.30 மணியளவில் டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
அதனைத் தொடர்ந்து, சென்னை பெரம்பூரில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு மாயாவதி அஞ்சலி செலுத்துவதற்காக, விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டார். சுமார் 10.45 மணியளவில் பெரம்பூர் பந்தர் கார்டன் மைதானம் சென்றடைந்த மாயாவதி, அங்கு வைக்கப்பட்டிருந்த ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மாயாவதியின் வருகையையொட்டி, வழிநெடுங்கிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அஞ்சலிக்கு பிறகு, அங்கிருந்த ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அங்கு கூடியிருந்த பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் மத்தியில் மாயாவதி உரையாற்றினார். அப்போது, "தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு சரியில்லை என்று குற்றம்சாட்டிய அவர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ வசம் தமிழக அரசு ஒப்படைக்க வேணடும்" என்றும் மாயாவசி வலியுறுத்தினார்.
அஞ்சலி நிகழ்வுக்கு பின், மதியம் 1.15 மணியளவில் மாயாவதி சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டார்.
இதையும் படிங்க: "ஆம்ஸ்ட்ராங்க்கு நடந்தது போல் யாருக்கும் நடக்கக்கூடாது.. கடவுளிடம் வேண்டுகிறேன்"- நடிகர் ராகவா லாரன்ஸ்