சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு தினந்தோறும் ஏராளமான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சென்னை - டெல்லி இடையே இயக்கப்படும் 4 விமானங்கள், சென்னையில் இருந்து சீரடி இடையே இயக்கப்படும் ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று, சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு இயக்கப்படும் விமானம் ஒன்று என 6 புறப்பாடு விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், டெல்லியில் இருந்து சென்னை வரும் 4 விமானங்கள், சீரடியில் இருந்து சென்னை வரும் ஒரு விமானம், ஹைதராபாத்தில் இருந்து சென்னை வரும் ஒரு விமானம் என 6 வருகை விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பாடு மற்றும் வருகை என மொத்தம் 12 விமானங்கள் இன்று ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விமானங்கள் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
ஆனால், முறையான முன்னறிவிப்புகள் இல்லாமல், விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். எனவே ரத்து செய்யப்பட்ட நகரங்களுக்கு செல்லும் பயணிகள் மாற்று விமானங்களில் தங்களை அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
விமான சேவை ரத்து குறித்து பயணிகளுக்கு முன்கூட்டியே குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இத்தகவலை அறியாதவர்கள் பின்னொரு நாளில் குறிப்பிட்ட இடத்துக்கு பயணம் மேற்கொள்ளலாம் என்று விமான நிறுவனங்களின் நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.