தஞ்சாவூர்: நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிக்க வலியுறுத்தி, பல்வேறு மாவட்டங்களில் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, 18 வயதான இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில், தஞ்சாவூரில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், 118 வயதான முகமது அபுசாலி என்ற மிட்டாய் தாத்தா, விழிப்புணர்வு பிளக்ஸ் கட்டிய ஆட்டோக்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தாஞ்சாவூரில் மிட்டாய் தாத்தா என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுபவர், முகமது அபுசாலி. 118 வயதான இவர், உடல் உழைப்பால் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் தேங்காய் மிட்டாய், சீனி மிட்டாய் உள்ளிட்ட பல மிட்டாய்களை தயாரித்து, கனீர் குரலில் மிட்டாய் என்று கூவி, குழந்தைகளுக்கு விற்பனை செய்து வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தஞ்சையைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. இதில் 118 வயதான மிட்டாய் தாத்தா, 18 வயதான இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில், தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும், ஓட்டுக்காக பணம் பெறக்கூடாது, வாக்கை வீணாக்காமல் கட்டாயம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தஞ்சாவூர் அரசு ஐடிஐ மைதானத்தில், விழிப்புணர்வு பிளக்ஸ் கட்டிய ஆட்டோக்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முன்னதாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, ஓட்டுக்காக பணம் வாங்கக் கூடாது, கட்டாயம் ஓட்டு போட வாருங்கள் என்று கூறி விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களையும், அவர் தயார் செய்த இனிப்புகளையும் வழங்கினார். இதனையடுத்து, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஆட்டோ, நகரின் முக்கிய பகுதிகளில் வலம் வந்தது.
இந்நிகழ்ச்சியில், தஞ்சை தனியார் தொண்டு நிறுவன செயலாளர் பிரபுராஜ்குமார், மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர். 100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் குற்ற சம்பவங்கள்..இந்நிலை மாற அதிமுகவிற்கு வாக்களியுங்கள்' - பிரேமலதா விஜயகாந்த் - Peramalatha Vijayakanth