சென்னை: கயல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆனந்திக்கு, ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டது. அன்றிலிருந்து கயல் ஆனந்தி என்றே அழைக்கப்படுகிறார். அதன் பிறகு சண்டிவீரன், த்ரிஷா இல்லனா நயன்தாரா, பரியேறும் பெருமாள், கமலி ஃப்ரம் நடுக்காவேரி, ராவண கோட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார். அதன்படி, குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் ஆனந்தி நடித்துள்ள படம் மங்கை. பெண்ணியம் பேசும் படமாக உருவாகி உள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, இன்று (பிப்.7) சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் மங்கை படத்தின் இயக்குநர் குபேந்திரன் காமாட்சி, கயல் ஆனந்தி, ஷிவின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் கயல் ஆனந்தி பேசும்போது, “இன்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. மிகவும் நன்றி உணர்வுடன் இங்கு நின்று கொண்டு இருக்கிறேன். இயக்குநர் கதை சொல்லும் போதே இரண்டு மணி நேரம் படம் பார்த்த உணர்வு ஏற்பட்டது. கண்டிப்பாக இப்படத்தை மிஸ் பண்ணக்கூடாது என்று தோன்றியது.
இது எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். உங்கள் அனைவரின் ஒத்துழைப்பால்தான் இந்த படம் உருவானது. ஒரு நல்ல படம் எடுத்து உள்ளோம் என்ற சந்தோஷத்தில் எல்லோரும் இருக்கிறோம். ரொம்ப நன்றி” என்று கூறினார். இதனைத் தொடர்ந்து, செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் குபேந்திரன் காமாட்சி, “பெண்கள் பற்றி ஆண்களின் பார்வையைத்தான் இப்படத்தில் காட்டியுள்ளோம். இளைய சமுதாயம் பற்றி பேசியுள்ளோம். கருத்து எதுவும் இப்படத்தில் சொல்லவில்லை. சில கேள்விகள் மட்டும் எழுப்பி உள்ளோம்.
இப்படம் பார்த்தால் ஆண்களுக்கு ஒரு புரிதல் வரும். மேலும், இது ஒரு உண்மைச் சம்பவம். எனக்கு தெரிந்த பெண்ணிற்கு நடந்த சம்பவத்தின் கற்பனை நீட்சிதான் இப்படம். தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் வெளியாக உள்ளது” என்றார். தயாரிப்பாளர் ஜாபர் பேசியதாவது, “அமீர் ஏற்கனவே மிகப்பெரிய சாதனையாளர். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அவர் இனிமேல் சினிமாவில் புதிதாக செய்ய வேண்டும் என்று கிடையாது.
இறைவன் மிகப் பெரியவன் திரைப்படம் இந்த ஆண்டின் மிகச் சிறந்த படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. மங்கை பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்திய படமல்ல. நீங்கள் படத்தைப் பார்த்தால் தெரியும். நாங்கள் கதையை நம்பித்தான் படம் செய்கிறோம்.
சினிமாவை காதலித்ததால் இதே சத்யம் திரையரங்கில் பிளாக்கில் டிக்கெட் வாங்கி படம் பார்த்த நான், தற்போது மேடையில் அமர்ந்துள்ளேன்” என்று பேசினார். அமீர் இயக்கி வரும் இறைவன் மிகப் பெரியவன் படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்.. சீமான் பங்கேற்பு!