காஸிபூர் : உத்தர பிரதேச மாநிலம் காஸிபூர் மாவட்டத்தில் பர்ஹி கிராமத்தில் ஏறத்தாழ 50 பயணிகளுடன் சென்ற பேருந்து உயர் மின்னழுத்த வயரில் உரசி தீ விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 5க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து இருக்கக் கூடும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பேருந்தில் தீ முற்றிலும் பரவி எலும்புக் கூடு போல் காட்சி அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மவு மாவட்டத்தின் கசா பகுதியில் இருந்து புறப்பட்ட பேருந்து மஹகர் பகுதியில் நடைபெற்ற திருமண விருந்தில் கலந்து கொள்ள சென்று உள்ளது.
அப்போது உயர் மின்னழுத்த வயர் மீது உரசியதில் பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பற்றிய தீ பேருந்து முழுவதும் பரவியது. இதையடுத்து பேருந்தில் பயணித்தவர்கள் முண்டியடித்துக் கொண்டு வெளியேறினர். இந்த கோர விபத்தில் 5 பேருக்கு மேல் உயிரிழந்து இருக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், பேருந்தில் பயணித்த அனைவருக்கு தீக்காயம் ஏற்பட்டு உள்ளது. அருகில் இருந்த கிராம மக்கள் விரைந்து செயல்பட்டு பேருந்தில் சிக்கிக் கொண்டவர்களை பத்திரமாக மீட்டனர். தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து உள்ள உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தீ விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை மற்றும் உதவி வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க : "தமிழகத்திற்கு சொட்டு தண்ணீர் திறக்க முடியாது... தண்ணீர் திறந்து விட முட்டாள்கள் அல்ல"- டி.கே.சிவக்குமார்!