புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஜார்சுகுடா மாவட்டத்தில் மகாநதி ஆறு உள்ளது. இங்கு அரசிடம் அனுமதி பெற்று ஏராளமான பயணிகள் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு இயக்கப்படும் சில படகுகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை எனவும், பாதுகாப்பு அம்சங்கள் கடைபிடிக்கப்படுவதில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று (ஏப்.19) மாலை 7 மணி அளவில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 50க்கும் மேற்பட்டோர் ஒரே படகில் மகாநதி ஆற்றில் பயணித்துக் கொண்டிருந்தனர். ஆற்றில் திடீரென வெள்ளப் பெருக்கு அதிகரித்த நிலையில், நிலை தடுமாறி, படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஒடிசா மாநில பேரிடர் அதிவிரைவு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நீரில் தத்தளித்தவர்களை பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். இருப்பினும் 10க்கும் மேற்பட்டோர் மாயமானதாக மீட்கப்பட்டவர்கள் தெரிவித்ததால் அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இன்று காலை வரை 7 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாயமானவர்களை தேடும் பணிக்காக ஸ்கூபா வீரர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கேமிரா மூலம் காணாமல் போனவர்களை கண்காணிக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவையும் மீறி அதிகளவிலான பயணிகளை ஏற்றி சென்றதே இந்த விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, படகு கவிழ்ந்த் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 4 லட்ச ரூபாய் நிவாரணம் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : உதயநிதியின் சனாதன தர்மம் கருத்து தவறானது.. அவர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்" - தெலங்கானா முதலமைச்சர்! - Revanth Reddy Santan Dharma Issue