திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் நாகவேணி நகரைச் சேர்ந்தவர் செந்தில்வேல் (46). இவர் இன்று தனது மனைவி, மாமனார், குழந்தைகளுடன் தனது இண்டிகா காரில் கொட்டாம்பட்டி அருகில் உள்ள வெள்ளிமலை கோயிலுக்குச் சென்றுள்ளார். அங்கு வழிபாடு மேற்கொண்டுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது அரவங்குறிச்சி - மணக்காட்டூர் சாலையில் காரிலிருந்து புகை வந்துள்ளது.
இதைக்கண்ட செந்தில் அனைவரையும் காரை விட்டு இறங்கச் சொல்லி தானும் இறுதியாக இறங்கியுள்ளார். காரில் பற்றிய புகையானது தீயாக மாறி மளமளவென கார் முழுவதும் பரவியது. இதனிடையே கார் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற நத்தம் தீயணைப்பு வீரர்கள் மேலும் தீ பரவாமல் அணைத்தனர்.