தமிழ்நாடு

tamil nadu

"இந்த பெருமழையினை அரசியல் செய்ய வேண்டாம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 9, 2023, 6:30 PM IST

மழை நீர் வடிகால் குறித்து யார் கேள்வி கேட்டாலும், அவர்களுடன் விவாதிக்க தயார் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை
சென்னை

சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோதாமேடு பகுதியில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து இன்று (டிச.09) ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; "தமிழ்நாடு முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் 3,000 இடங்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கூடுதல் இடங்களில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அதிகப்படியான மருத்துவ முகாம்கள் திட்டமிடப்பட்டிருந்தது.

இதில் சென்னை மாவட்டத்தில் 679 இடங்களிலும், திருவள்ளுர் மாவட்டத்தில் 200 இடங்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 200 இடங்களிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 இடங்களிலும், தமிழ்நாட்டில் உள்ள மற்ற மாவட்டங்களில் 2,000 என்கின்ற வகையில் மொத்தம் 3,000 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 06.12.2023 முதல் 08.12.2023 ஆகிய 3 நாட்கள் நடைபெற்ற 2,149 முகாம்கள் நடமாடும் மருத்துவக்குழுக்களின் வாயிலாக நடத்தப்பட்டிருக்கிறது. இந்த முகாம்களின் மூலம் 1,69,421 பேர் பயன்பெற்று இருக்கின்றனர். இந்த பயனாளர்களில் 867 பேருக்கு காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் இருமல் மற்றும் சளி தொல்லை பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள் 13,372 பேர், இவர்கள் அனைவருக்கும் தற்போது மருத்துவம் பார்க்கப்பட்டு வருகிறது" என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்; "நிவாரண பொருட்கள் வழங்கப்படும் எந்த இடங்களிலும் பொதுமக்கள் கோவமாக எங்களிடம் பேசுவதில்லை, ஆனால் ஒரு சில இடங்களில் எதிர்கட்சியை சேர்ந்தவர்களோ, வேறு கட்சியை சேர்ந்தவர்களே பொதுமக்களை எங்களிடம் கோவமாக வாக்குவாதம் செய்யச் சொல்லி வீடியோ எடுத்து சமூக வளைதளங்களில் பதிவு செய்கின்றனர், அது பற்றியெல்லாம் நாங்கள் கவலைகொள்ளவில்லை.

தொடர்ந்து பொதுமக்களுக்கு உதவிகளை செய்யவே விரும்புகின்றோம். நான் ஒருமாத காலத்திற்கு முன்னர் சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகள் குறித்து பேசி 20 செ.மீ மழை வந்தாலும் எங்கும் தண்ணீர் தேங்காது என்று கூறியிருந்தேன். அதனை தற்போது சமூக வளைதளங்களில் பதிவேற்றம் செய்து விமர்சித்து வருகின்றனர்.

இந்த பெருமழையினை அரசியல் செய்ய வேண்டாம். அப்படி அரசியல் செய்தாலும், மழைநீர் வடிகால் பணிகள் குறித்து யார் கேள்வி கேட்டாலும் அது எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமியாக இருந்தாலும், சீமானாக இருந்தாலும் அல்லது மற்ற கட்சிகளைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுடன் நாங்கள் எதிர் எதிரே அமர்ந்து விவாதிக்க தயாராகவே உள்ளோம். மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளை நேரிலே அழைத்துச் சென்று காட்ட தயாராக உள்ளோம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:வெள்ளத்துல கார் முழுவதுமா சேதமாயிடுச்சா?... முழு இன்சூரன்ஸ் தொகையும் பெறுவது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details